ஒரேநாளில் பாராளுமன்ற தேர்தல்; திமுக கோரிக்கை
சென்னை: பாராளுமன்ற தேர்தலை மே மாதம் இரண்டாவது வாரத்தில் ஒரே நாளில் நடத்த வேண்டும் என திமுக தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுதல் விடுத்துள்ளது.
சமீபத்தில் தேர்தல் ஆணையம் பாராளுமன்ற தேர்தலை பல கட்டங்களில் நடத்துவதா அல்லது ஒரே கட்டத்தில் நடத்துவதா என்பது குறித்து ஆலோசிக்க மத்திய தேர்தல் ஆணையம் டெல்லியில் நேற்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் திமுக சார்பில் கலந்துகொண்ட விடுதலை விரும்பி கூறுகையில்,
ஏப்ரல் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நடைபெறுவதால் மே இரண்டாவது வாரம் ஒரே நாளில் தேர்தலை நடத்த வேண்டும். தேர்தல் பணியில் மாநில அரசு ஊழியர்களை பணியமர்த்தலாம். போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல் இருப்பதால் வாக்காளர் அடையாள அட்டை தேவைதானா என்பதை பரிசீலிக்க வேண்டும்
பாராளுமன்ற தேர்தல் அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெற திமுக முழு ஒத்துழைப்பு கொடுக்கும். தேர்தல் பணிக்கு நியமிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகளை பதிவுசெய்வதில் தற்போதுள்ள நடைமுறை சிக்கல்களை தவிர்க்க, புதியமுறை உருவாக்க வேண்டும்.
வாக்குச்சாவடியில் நேராக சென்று ஓட்டு போடுபவர்கள் குறித்த விவரத்தை தெளிவாக அறிய முடிவதை போல் தபால் வாக்குகளில் கண்டறிய முடிவதில்லை. எனவே, தபால் வாக்குகளை சரியாக எண்ணவும், வேட்பாளர்களின் வாக்குகளில் தபால் வாக்குகளை தவறாமல் சேர்க்கவும் புதிய முறையை கண்டறிய வேண்டும்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் எந்த வாக்காளரின் பெயரும் விட்டுப்போகாமல் அனைவரையும் பட்டியலில் இணைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் விடுதலை விரும்பி.