படகை கொளுத்தி இலங்கை கடற்படை அத்துமீறல்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். வலைகளை கிழித்து எறிந்தனர். ஒரு படகிற்கு தீ வைத்தனர்.
தமிழக கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக மீனவர்கள் படும் துயருக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.
நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து தமிழக மீனவர்கள் சுமார் 30 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இரவு சுமார் 1 மணி அளவில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்துள்ளனர்.
தங்கள் கையில் இருந்தவற்றால் மீனவர்களை தாக்கியுள்ளனர். மீனவர்களின் வலைகளை கிழித்தனர். துப்பாக்கி முனையில் மீனவர்களை மிரட்டி கடலுக்குள் தள்ளிவி்ட்டனர்.
ஒரு படகின் மீது டீசலை ஊற்றி தீவைத்து கொளுத்தினர். திரும்பவும் மீன் பிடிக்க வரக்கூடாது என மிரட்டிவிட்டு சென்றனர். அவர்கள் சென்றபின் கடலில் தத்தளித்து கொண்டிருந்த மீனவர்கள் தங்கள் படகிற்கு நீந்தி வந்து உயிர் தப்பினர்.
எரிந்து கொண்டுருந்த படகில் உள்ள தீயையும் அணைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் கரை திரும்பினர்.
இது குறித்து சில மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினர் எங்களை கயிற்றால் தாக்கினார்கள். பின்னர் துப்பாக்கியால் மிரட்டி தண்ணீரில் குதிக்க வைத்தனர். அவர்கள் சென்றபின் நாங்கள் படகில் ஏறி கரை திரும்பினோம். இது தினமும் நடப்பதால் எங்களால் நிம்மதியாக மீன் பிடிக்க முடியவில்லை.
சில சமயங்களில் நமது எல்லைக்குள் வந்தும் தாக்குகிறார்கள். அவர்களைஎதிர்த்து கேள்வி கேட்டால் உயிரோடு திரும்ப முடியாது என்றார்.
அதேபோல் பாம்பன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் 10 படகுகளில் சென்ற தமிழக மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் தாக்கியுள்ளனர்