விதவைப் பெண்ணை கற்பழித்தவர் அடித்துக் கொலை !
விருதுநகர் : விருதுநகர் அருகே விதவைப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
விருதுநகர் அருகே உள்ளது நந்திரெட்டிபட்டி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன் (48). இவரது சகோதரர் பொன்னுசாமி. திருவில்லிபுத்தூரில் வசித்து வருகின்றார். கதிரேசன் தனது சகோதரர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார் எனறு கூறப்படுகிறது.
அதே பகுதியில் வசித்து வருபவர் வீரலட்சுமி. இவர் கணவரை இழந்து தனிமையில் வசித்து வருகிறார். இதை தெரிந்துகொண்ட கதிரேசன் அந்த பெண்ணிடம் சென்று அடிக்கடி சில்மிஷம் செய்வாராம். இதனை வீரலட்சுமி கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் வீரலட்சுமியின் வீட்டிற்குள் திடீரென புகுந்த கதிரேசன், அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வீரலட்சுமி தனது உறவினர்களிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
இதில் ஆவேசம் அடைந்த வீர லட்சுமியின் உறவினர்கள் இளையராஜா, முத்தையா ஆகியோர் பொன்னுசாமியின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த கதிரேசனை அடித்து உதைத்துள்ளனர். மேலும் ஆத்திரம் அதிகமாகி அருகில் இருந்த உலக்கையை எடுத்து கதிரேசனை தாக்கியுள்ளனர். இதில் கதிரேசன் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ராஜபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த திருவில்லிபுத்தூர் போலீசார் முத்தையாவையும், இளையராஜாவையும் வலை வீசி தேடி வருகின்றனர்.