இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 7ம் தேதி கிராமங்களில் கருப்புக் கொடி
சென்னை: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பி்ல் 7ம் தேதியன்று தமிழகம் முழுவதும் கிராமங்களில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறவுள்ளது.
இலங்கையில் போர் நிறுத்தம் அமலாக வேண்டும். இனப்படுகொலை நிற்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பி்ல் நேற்று பொது வேலைநிறுத்தம் நடந்தது.
இதையடுத்து 7ம் தேதி கிராமங்களில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், அடுத்த கட்டமாக 7-ந்தேதி (சனிக்கிழமை) அனைத்து கிராமங்கள், சிற்றூர்கள், பேரூர்கள் ஆகியவற்றில் கருப்பு கொடி பேரணி நடைபெறும்.
மாலை 4 மணிக்கு இந்த போராட்டம் தொடங்கும். அனைத்து தரப்பு மக்களும் இதில் பங்கேற்பார்கள்.
போராட்டத்தில் பங்கேற்போர் மற்ற அரசியல் கட்சிகள் பற்றியோ, அரசியல் தலைவர்கள் பற்றியோ, ஆட்சி பற்றியோ விமர்சிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.