இனப்படுகொலையை தடுக்கக் கோரி மலேசியாவில் தமிழர் தீக்குளித்து தற்கொலை
ஈழத்தைச் சேர்ந்தவர் ராஜா. 27 வயதாகும் இவர் கடந்த 3 வருடங்களாக மலேசியாவில் வசித்து வந்தார். வெள்ளிக்கிழமை அவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜலான் தமன் தெருவில் உள்ள முனீஸ்வரர் கோவிலுக்கு அருகே இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
உடல் மீது பற்றி எரிந்த நெருப்புடன் அலறியபடி ராஜா ஓடியதைப் பார்த்த ஒரு டாக்சி டிரைவர் கையில் தண்ணீருடன் அவரை நோக்கி ஓடினார். ஆனால் அதற்குள் ராஜா கருகி உயிரிழந்து விட்டார்.
விரைந்து வந்த போலீஸார் அவரது உடலை மீட்டனர். அவரது உடலுக்கு அருகே டைரி, ஒரு பர்ஸ், தீப்பெட்டி, பை ஆகியவை மீட்கப்பட்டன.
இந்த முனீஸ்வரர் கோவிலுக்குத்தான் தினசரி இரவு வருவார் ராஜா. அங்கு வாய் விட்டு சத்தமாக, இலங்கை ராணுவத்திடமிருந்து ஈழத் தமிழர்களை காப்பாற்று என மனமுருக வேண்டுவாராம்.
தீக்குளித்து உயிர் நீத்த ராஜா எழுதி வைத்துள்ள ஒரு கடிதத்தையும் மலேசிய போலீஸார் மீட்டுள்ளனர்.
அதில் ராஜா கூறியிருப்பதாவது ...
எனது பெயர் ராஜா. 1982ம் ஆண்டு மே 27ம் தேதி நான் பிறந்தேன். 2006ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி வேலை தேடி மலேசியாவுக்கு வந்தன்.
எனக்கு நல்ல வேலையும் கிடைத்தது. பிறகு ஏன் நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.? இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். உடனடியாக அங்கு அமைதிப் பேச்சுக்கள் தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த செயலில் நான் ஈடுபட்டேன்.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உடனடியாக இலங்கைக்குப் போக வேண்டும். அவருடன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி, நார்வே அமைதித் தூதர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரும் அவருடன் செல்ல வேண்டும்.
எனது டைரியை வைகோவிடம் ஒப்படைத்து விடுங்கள். அவரால்தான் எனது இறுதி விருப்பங்களை நிறைவேற்ற முடியும் என்று கூறியுள்ளார் ராஜா.
ராஜாவின் தீக்குளிப்பு சம்பவம் மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் ஈழத் தமிழர்களுக்காக நடந்துள்ள 4வது தீக்குளிப்புச் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் சென்னையில் இளைஞர் முத்துக்குமார் உயிர் நீத்தார். இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியில் ரவி என்பவர் உயிரிழந்தார். நேற்று நாகை மாவட்டம் சீர்காழியில் ரவிச்சந்திரன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் ஈழத் தமிழர் ஒருவர் மலேசியாவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.