பிரமோஸ் ஏவுகணை-ராணுவம் 'கறார்'
இந்திய-ரஷ்ய கூட்டு தயாரிப்பான பிரமோஸ் ஒலியின் வேகத்தில் சுமார் 290 கிமீ., தூரம் சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
சமீபத்தில் ராஜஸ்தானின் பொக்ரான் பகுதியில் ராணுவத்தின் டிஆர்டிஓ பிரிவு பிரமோஸ் ஏவுகணை சோதனை நடத்தியது. முதலில் சோதனை வெற்றி அடைந்ததாகவும், பின்னர் அது தோல்வி அடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ராணுவ தலைமை தளபதி தீபக் கபூர் கூறுகையில்,
இந்த விஷயத்தில் ராணுவம் ஒரு வாடிக்கையாளர் என்பதை மறுக்க முடியாது. டிஆர்டிஓ பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்த பின்னரே அதை வாங்குவோம். அவர்கள் அதை சாதித்து காட்டும்போது வாழ்த்து தெரிவிப்போம். பொது மக்களின் பணத்தை விரயம் செய்வது தவறு.
ராஜஸ்தானில் பிரமோஸ் சோதனை செய்யப்பட்ட போது நானும் உடனிருந்தேன். ஏவுகணைக்கு 53 கிமீ தூரத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சோதனையை ஒரு கிமீ தூரத்தில் இருந்து நேரில் பார்த்தேன் என்றார் தீபக் கபூர்.