மூடப்பட்ட மருத்துவ, பொறியியல், விவசாயக் கல்லூரிகள் திறப்பு
சென்னை: இலங்கைப் பிரச்சினை தொடர்பாக மாணவர்கள் ஸ்டிரைக்கில் இறங்கியதைத் தொடர்ந்து மூடப்பட்ட கல்லூரிகளில் முதல் கட்டமாக இன்று தொழில் கல்லூரிகளான மருத்துவம், பொறியியல், விவசாயம் மற்றும் கால்நடைக் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன.
இலங்கைப் பிரச்சினை தொடர்பாக தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஸ்டிரைக்கில் இறங்கினர். பல பகுதிகளில் உண்ணாவிரதம், பேரணி, ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
போராட்டம் வலுப்பெற்றதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துக் கல்லூரிகளையும் காலவரையின்றி மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து அனைத்துக் கல்லூரிகளும், விடுதிகளும் மூடப்பட்டன.
இந்த நிலையில், சென்னை சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கல்லூரியை மூடியது தவறு, உடனடியாக திறக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த பின்னணியில் மருத்துவம், பொறியியல், கால்நடை மற்றும் விவசாயக் கல்லூரிகளை மட்டும் திறக்க அரசு உத்தரவிட்டது.
அதன்படி இன்று முதல் இந்தக் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட அனைத்து பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், கோவை வேளாண் பல்கலைக்கழகம், மதுரை விவசாயக் கல்லூரி, கால்நடைக் கல்லூரி, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்டவை இன்று திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்படத் தொடங்கின.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் இம்மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மன்னர் ஜவஹர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications