நிதியுதவித் திட்டத்தால் நாடு நாசமாகி விடும் ஒபாமாவுக்கு குடியரசுக் கட்சி எச்சரிக்கை
பொருளாதார நெருக்கடி அமெரிக்காவின் கழுத்தை இறுக்கி வரும் நிலையில் அதிலிருந்து நாட்டைக் காக்க அதிபர் ஒபாமா 40 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்துள்ளார். இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முடியும் என ஒபாமா நம்புகிறார்.
இதனால் 2010ம் ஆண்டுன் முடிவில் 13 லட்சம் முதல் 39 லட்சம் வரை வேலை வாய்ப்பை உருவாக்கவிருப்பதாகவும், வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 8.7 சதவீதத்திலிருந்து 2.1 சதவீதமாக குறையும் எனவும் ஒபாமா அரசு கருதுகிறது.
ஆனால், இது வளர்ச்சிக்கு வழி வகுக்காது. நிதி நெருக்கடியை உண்டாக்கி நாட்டின் வீழ்ச்சிக்கு வழிவகுத்துவிடும் என எதிர்கட்சியான குடியரசு கட்சி எச்சரித்துள்ளது.
செனட் வங்கி கமிட்டி உறுப்பினரான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஷெல்பி இதுகுறித்துக் கூறுகையில்,
இது வளர்ச்சிக்கான திட்டம் இல்லை என்பது அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு தெருவில் இருப்பவர்களுக்கும் தெரியும். வங்கிகளில் சீர்த்திருத்தம் கொண்டு வராமல், மக்களுக்கு வங்கிகளின் மீது நம்பிக்கை வராத நிலையிலும், முதலீடுகள் கிடைக்க வழிவகைகள் செய்யாத சூழ்நிலையில் என்ன செய்தாலும் பொருளாதாரம் முன்னேறாது.
வங்கிகளை காப்பாற்ற ஒபாமா எடுத்திருக்கும் முடிவு, அமெரிக்காவை நிதி நெருக்கடியை நோக்கி கொண்டு சென்றுவிடும் என்றார் ஷெல்பி.
அதிபர் தேர்தலில் ஒபாமாவுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்த மெக்கெய்ன் கூறுகையில், 2010ல் மக்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்கிறார் ஒபாமா. கட்டுமானப்பணி போன்றவைகளுக்கு அதிக முன்னுரிமை கொடுத்தால் வேலை வாய்ப்பு உடனடியாக அதிகரிக்கும். அதை ஒபாமா முதலில் செய்ய வேண்டும்.
அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடனை வாங்க இருக்கிறார்கள். இதை அனைத்தையும் கட்ட வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு அடுத்து வரும் இளம் தலைமுறையினர் தள்ளப்படுவார்கள். நமது மகன்கள், பேரக் குழந்தைகளில் தலையில் ஒபாமா மிகப்பெரிய சுமையை ஏற்றி வைக்கிறார் என்றார் மெக்கெய்ன்.
செனட் பட்ஜெட் கமிட்டி தலைவர் கென்ட் கான்ராட் கூறுகையில், பொருளாதார நெருக்கடியில் வேலையில்லாத திண்டாட்டம் உச்சத்தை தொட்டுவிட்டது. உடனடியாக நாட்டின் வளர்ச்சிக்கு ஒபாமா அரசு பாடுபட வேண்டும். இல்லை என்றால் நாம் அதள பாதாளத்துக்கு தள்ளப்படுவோம் என்றார்.