மத்திய அமைச்சர் மகாவீர் பிரசாத் மீது கொலை வழக்கு
டெல்லி: மத்திய அரசுக்கு இன்று பெரும் நெருக்குதல் ஏற்பட்டது. மத்திய சிறு தொழில்துறை அமைச்சர் மகாவீர் பிரசாத் மீது உ.பி. போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த வழக்கு இன்று பதிவு செய்யப்பட்டது.
மகாவீர் பிரசாத் தவிர மேலும் இருவர் மீதும் கோரக்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மகாவீர் பிரசாத் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஆவார். உ.பி. மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அதே மாவட்டத்தைச் சேர்ந்த ராம் பிரகாத் சிங் என்பவர் கடந்த ஆண்டு ஜனவரி 28ம் தேதி சொத்து வழக்கில் படுகொலை செய்யப்பட்டார்.
ஆனால் மகாவீர் பிரசாத் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீது இதை சாதாரண விபத்து என போலீஸில் பதிவு செய்ய வைத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கொலை செய்யப்பட்டவரின் மனைவி அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், இந்தக் கொலையை அமைச்சர் மகாவீர் பிரசாத் சொல்லித்தான் மற்ற இருவரும் செய்தனர். ஆனால் தற்போது அதை விபத்தாக மாற்றி விட்டனர்.
எனவே அமைச்சர் மகாவீர் பிரசாத் உள்ளிட்ட 3 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்து வந்த அலகாபாத் உயர்நீதிமன்றம், கொலையைச் செய்யத் தூண்டியதாக அமைச்சர் மகாவீர் பிரசாத் மீது மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார். மற்ற இருவரும் கொலை செய்ததாக கூறியுள்ளார்.
எனவே இதுதொடர்பாக 3 பேர் மீதும் கொலை வழக்கை கோரக்பூர் காவல்துறை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து மகாவீர் பிரசாத் உள்ளிட்ட 3 பேர் மீதும் கோரக்பூர் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மகாவீர் பிரசாத் யார்?
2004ம் ஆண்டு கோரக்பூர் மாவட்டம் பன்சாகான் தொகுதியிலிருந்து லோக்சபாவுக்கு காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் பிரசாத்.
தற்போது எம்.பியாக இருப்பது 3வது முறையாகும். 1980ம் ஆண்டு முதல் முறையாக லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முதலில் ரயில்வே இணை அமைச்சராக பதவி வகித்தார். பின்னர் சுரங்கத்துறை அமைச்சராக இருந்தார். தற்போது சிறுதொழில்துறை அமைச்சராக உள்ளார்.
இதுதவிர 1995ம் ஆண்டு முதல் 2000மாவது ஆண்டு வரை ஹரியாணா மாநில ஆளுநராகவும் இருந்துள்ளார் மகாவீர் பிரசாத்.