இஸ்ரேல் தேர்தலில் மகா இழுபறி

வாக்குப் பதிவுக்குப் பின் நடந்த கருத்துக் கணிப்பின்படி முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவி் லிகுட் கட்சியும் வெளியுறவு அமைச்சர் ஸிபி லிவினியின் கடிமா கட்சியும் கிட்டத்தட்ட சரிசமமான இடங்களை வெல்லும் எனத் தெரியவந்துள்ளது.
மொத்தமுள்ள 120 இடங்களில் லிவினியின் கட்சி 28 இடங்களிலும், நெதன்யாகுவின் கட்சி 27 இடங்களிலும் வெல்லும் எனத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இரு கட்சிகளுமே ஆட்சியமைக்க இப்போதே உரிமை கோர ஆரம்பித்துவிட்டன.
ஆனால், நெதன்யாகுவுக்கு பிற வலதுசாரிக் கட்சிகளின் தலைவர்களான அவிக்டோர் லிபர்மேன், பாதுகாப்பு அமைச்சரான எகுட் பராக் (இவரும் முன்னாள் பிரதமரே) ஆகியோரின் கட்சிகள் ஆதரவு தரும் என எதி்ர்பார்க்கப்படுகிறது. இந்தக் கட்சிகள் தலா 15, 13 இடங்களில் வெல்லும் எனத் தெரிய வந்துள்ளது.
அடிப்படைவாத போக்கு கொண்ட லிபர்மென், பராக் ஆகியோர் அதே கொள்கை உடைய நெதன்யாகுவை ஆதரிக்கவுள்ளதால் அவரே ஆட்சியமைப்பார் எனத் தெரிகிறது.
ஸிபி லிவினி கொஞ்சம் நடுநிலையான போக்கு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரை ஆட்சிக்கு வர விடாமல் இந்த மூவரும் தடுப்பது உறுதி என்கின்றனர் இஸ்ரேல் பார்வையாளர்கள்.
அதிகாரப்பூர்வமான முடிவு அடுத்த வாரம் தான் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இஸ்ரேலில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தேர்தல் முடிவோடு கிட்டத்தட்ட ஒத்துப் போவது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தல் முடிவுகளுக்குப் பின் இஸ்ரேல் அதிபரான சிமோன் பெரஸ் யாரை ஆட்சியமைக்க அழைப்பது என்பதை முடிவு செய்வார். பெரும்பான்மைமையை நிரூபிக்க 42 நாட்கள் கால அவகாசம் தரப்படுவது இஸ்ரேலில் வழக்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து வைத்துள்ள இஸ்ரேலில் 53 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications