தமிழர்கள் வெளியேற 'பாதுகாப்பு வளையம்'

இதற்கு முன்பு பாதுகாப்பு வளையங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளை தனது பாதுகாப்பு வளைய பட்டியலிலிருந்து ராணுவம் நீக்கி விட்டதாம்.
விடுதலைப் புலிகள் பகுதியிலிருந்து வெளியேறி தமிழர்கள் அரசுப் பகுதிக்கு வர வேண்டும். இதற்காக பாதுகாப்பு வளையப் பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அங்கு வரும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என இலங்கை அரசும், ராணுவமும் அறிவித்தன.
இதை நம்பி பாதுகாப்பு வளையப் பகுதிகளுக்கு வந்த அப்பாவித் தமிழர்களை குவியல் குவியலாக கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது இலங்கை ராணுவம்.
இலங்கை ராணுவத்தின் இந்த செயலுக்கு ஐ.நா. சபை உள்பட பல்வேறு உலக நாடுகள், மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இருப்பினும் இதைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பாதுகாப்பு வளையப் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது ராணுவம்.
இந்த நிலையில் புதிய பாதுகாப்பு வளையப் பகுதிகளை உருவாக்கியிருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது. பழைய பாதுகாப்பு வளையப் பகுதிகளை கைவிட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறுகையில், பழைய பாதுகாப்பு வளையப் பகுதிகளுக்குள் தமிழர்கள் வந்து விடாமல் புலிகள் தடுத்து வருகின்றனர். மேலும், அப்பகுதிக்கு வரும் தமிழர்கள் மீதும் புலிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
எனவே புதிய பாதுகாப்பு வளையப் பகுதிகளை ராணுவம் உருவாக்கியுள்ளது என்றார் அவர்.
வன்னிப் பகுதியில் போர் முனையில் கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ளனர். அவர்களின் நிலை பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
இவர்கள் வெளியேறுவதற்காக ஜனவரி 21ம் தேதி முதல் பாதுகாப்பு வளையப் பகுதியை ராணுவம் அறிவித்தது. ஆனால் அப்பகுதிக்கு வந்த நூற்றுக்கணக்கான தமிழர்களை ராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தி கொன்று குவித்தது நினைவிருக்கலாம்.
தற்போது புதிதாக ராணுவம் அறிவித்துள்ள பாதுகாப்பு வளையப் பகுதி, வட கிழக்கு கடற்கரையோரம் 12 கிலோமீட்டர் தொலைவிலான பகுதியாகும். அங்கு ஏற்கனவே தமிழர்கள் வரத் தொடங்கி விட்டதாகவும் உதய நாணயக்காரா கூறியுள்ளார்.
இந்த நிலையில், விடுதலைப் புலிகளின் பகுதிகளுக்குள் மேலும் முன்னேறியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. சுதந்திராபுரத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கிட்டங்கியைக் கைப்பற்றியுள்ளதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications