வவுனியா-சன் டிவி மறு ஒளிபரப்பு மைய ஊழியர்கள் கைது
வவுனியா: இலங்கையின் வவுனியாவில் உள்ள சன் டிவியின் மறு ஒளிபரப்பு மையத்தில் பணியாற்றி வந்த 4 ஊழியர்களை அந் நாட்டு போலீஸார் திடீரென கைது செய்துள்ளனர்.
சன் டிவிக்கு, வவுனியாவின், வைரபுளியங்குளம் என்ற இடத்தில் மறு ஒளிபரப்பு மையம் உள்ளது. இந்த மையத்திலிருந்துதான் இலங்கையில் சன் டிவி நிகழ்ச்சிகள் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.
மறு ஒளிபரப்பு மையம் உள்ள கட்டடம், தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி. செல்வம் அடைக்கலநாதனுக்குச் சொந்தமானது. இந்த கட்டடத்தின் ஒரு பகுதியில் சன் டிவி மையமும், இன்னொரு பகுதியில் அடைக்கலநாதனின் அலுவலகமும் உள்ளன.
கடந்த 1ம் தேதி இந்த அலுவலகம் மீது சிலர் கையெறிகுண்டுகளை வீசித் தாக்கினர். அப்போது செல்வம் அடைக்கலநாதன் அங்கு இல்லை. இதில் மையம் லேசாக சேதமடைந்தது.
இந் நிலையில் இந்த அலுவலகத்தில் இலங்கை போலீஸார் சோதனை என்ற பெயரில் நுழைந்து நான்கு ஊழியர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
முறையான உரிமம் இன்றி மறு ஒளிபரப்பு மையம் செயல்படுவதாக கூறி அங்கிருந்த கருவிகளையும் போலீஸார் எடுத்துச் சென்று விட்டனர்.