புலிகள் ஆயுதங்களை போடச் சொல்வதா? ப.சிதம்பரத்திற்கு வைகோ கண்டனம்
திருச்சி: விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என கோரியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்சியில், இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கோரி தமிழ்நாடு தேவேந்திரர்குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
இதில் வைகோவும் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய மந்திரி ப.சிதம்பரம் தமிழக மக்களை ஏமாற்றும் விதமாக போர்நிறுத்தம் செய்ய வேண்டுமானால் ஆயுதங்களை விடுதலைப்புலிகள் கீழே போட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
எந்த போர் நிறுத்தத்தில் இதுவரை ஒரு தரப்பை மட்டும் ஆயுதத்தை கீழே போட சொல்லி இருக்கிறார்கள். போர் நிறுத்தம் என்றால் இருபுறமும் ஆயுதங்களை கீழே போட வேண்டும்.
விடுதலைப்புலிகளை பொறுத்தவரை 2004-ம் ஆண்டு டிசம்பரில் நார்வே தூதுக்குழு கேட்டுக் கொண்டதற்கு போர் நிறுத்தம் செய்தனர். அதைத்தொடர்ந்து போர் நிறுத்தம் செய்யப்பட்டது என்றார்.