கருத்துக்கணிப்புக்கு தேர்தல் ஆணையம் தடை
டெல்லி: நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களின் போது வாக்குப்பதிவு முடியும் நேரத்துக்கு முந்தைய 48 மணி நேரத்தில் கருத்துகணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்றம் மற்றும் சில மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலும் நடக்கவிருக்கிறது. தேர்தலில் வாக்குப்பதிவு செய்துவிட்டு வெளியில் வருபவர்களிடந் கருத்துகணிப்பு கேட்கப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
எனவே, இவ்வகையான கருத்துக்கணிப்புக்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் கருத்துக்கணிப்புக்கு தடை விதிக்க மத்திய அரசு சட்டம் இயற்றும்மாறு அறிவுறுத்தியது. அதுவரை, தேர்தல் ஆணையமே விதிமுறைகளை வகுக்கலாம் என கூறியது.
அதன்படி, கருத்துக்கணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி உள்ளது. இதுபற்றி தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேர்தல் ஒரே கட்டமாக நடப்பதாக இருந்தால், வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்துக்கு முந்தைய 48 மணி நேரத்தில் கருத்துக்கணிப்புகளையோ, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளையோ பத்திரிகைகள், டிவிகள் மற்றும் இதர ஊடகங்களில் பிரசுரிப்பதோ, ஒலி, ஒளிபரப்புவதோ, விளம்பரப்படுத்துவதோ கூடாது.
பல கட்ட தேர்தல்களின்போதும், ஒரே நேரத்தில் வெவ்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட தேர்தல்களின்போதும், முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்னால் இருந்து தொடங்கி, சம்பந்தப்பட்ட எல்லா மாநிலங்களிலும் இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு முடிவடையும் நேரம்வரை கருத்துக்கணிப்புகளையோ, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளையோ வெளியிடக்கூடாது.
இந்த தடை உத்தரவு, அரசு மற்றும் தனியார் டிவிகள், ரேடியோக்கள், செயற்கைக்கோள் ஒலி, ஒளிபரப்பு, டிடிஎச் சேவை, கேபிள் சேனல்கள் ஆகியவற்றுக்கு பொருந்தும் என்று கூறியுள்ளது தேர்தல் ஆணையம்.