இலங்கை: குடியரசுத் தலைவரிடம் இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை மனு
டெல்லி: இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று கோரி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் திமுக தலைமையிலான இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை துணை அமைப்பு மனு அளித்தது.
அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான இந்தப் அமைப்பில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கனிமொழி எம்.பி, மத்திய மந்திரி ஆ.ராசா ஆகியோர் செயலாளர்களாகவும், ஓய்வு பெற்ற நீதிபதிகள், மோகன், கோகுலகிருஷ்ணன், ஜனார்த்தனம், ராஜன், பாஸ்கரன், சாமிதுரை, சண்முகம் மற்றும் பேராசிரியர் தனபாலன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
நேற்று இக்குழுவினர் டெல்லி சென்று குடியரசுத் தலைவரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
அந்த மனுவில்,
இலங்கையின் வடக்குப் பகுதியில் வசித்து வரும் 2 லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி, காடுகளிலும், மேடுகளிலும் வசித்து வருகிறார்கள். அங்கு அப்பாவி மக்கள் மிகவும் கொடூரமான நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். அங்கு போர் நிறுத்தம் ஏற்படவும், இலங்கை தமிழர்களின் மனித உரிமைகள் காக்கப்படவும், சர்வதேச சமுதாயம் உடனடியாக தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்று வரும் போரினால், இதுவரை 70 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் உயிரிழந்துள்ளார்கள். அங்கு தமிழினமே அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழர்கள் மீது இலங்கை விமானங்கள் குண்டு வீசி அழிக்கவும் வாய்ப்பு உள்ளது. அங்கு மனித உரிமை மீறல் தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழ் மக்களுக்கு, உணவு, உடை, மருந்து போன்ற அத்தியாவசிய பொருள்கள் மறுக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தீருவதற்கு, ஐ.நா. சபையே ஒரே நம்பிக்கை. இந்த சூழலில் இந்திய-இலங்கை அரசுகள், சர்வதேச நாடுகள், சர்வதேச அமைப்புகள் ஆகியோர் உடனே தலையிட்டு, அங்கு போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எங்கள் அமைப்பு கேட்டுக் கொள்கிறது. பல ஆண்டுகளாக போர் நிறுத்தம் ஏற்படாத நிலையில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கமிஷன் ஆகியோர் இந்த பிரச்சினையில் தலையிடவேண்டும்.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஆலந்து, நார்வே உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஜப்பான் ஆகிய அமைதி விரும்பும் நாடுகள் அனைத்தும், இந்த பிரச்சினையை ஐ.நா பாதுகாப்பு சபை கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.
40 ஆண்டுகளாக இலங்கை தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வரும் அடிப்படை உரிமைகளை மீட்டுத் தர உதவவேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். காமன்வெல்த் நாடுகளும், சார்க் நாடுகளும் இலங்கை அரசை போர்நிறுத்தம் செய்யும்படி வலியுறுத்த வேண்டும். சர்வதேச மனித உரிமை அமைப்பும், இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை கண்காணித்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.