மேடாஸ் நிறுவனங்களை அரசு ஏற்க ராஜு மகன்கள் எதிர்ப்பு!
சத்யம் நிறுவனத்தில் நடந்துள்ளது போன்ற மோசடிகள் மேடாஸிலும் நடந்திருக்கும் என நம்புவதால் இந்த முடிவை அரசு மேற்கொண்டுள்ளதாக கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சர் பிசி குப்தா தெரிவித்துள்ளார்.
இதன் எதிரொலியாக மேடாஸ் இன்ஃபரா, மேடாஸ் பிராபர்ட்டிஸ் என்ற அந்த இரண்டு நிறுவனங்களின் இயக்குநர் வாரியத்தைக் கலைக்க மத்திய சட்ட வாரியத்திற்கு கம்பெனி விவகாரத்துறை செவ்வாய்க்கிழமை மாலை பரிந்துரை செய்தது.
இதையடுத்து சத்யம் நிறுவனத்தை போலவே ராஜுவின் மகன்களுடைய மேடாஸ் நிறுவனங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் சூழல் உருவாகியுள்ளது.
ஆனால் அரசின் இந்த முடிவை கடுமையாக எதிர்த்து வருகின்றனர் ராஜுவின் மகன்கள் தேஜா ராஜு மற்றும் ராமராஜு. தங்கள் எதிர்ப்பு மனுவை மத்திய கம்பெனிகள் சட்ட வாரியத்திடம் தாக்கல் செய்துள்ளனர்.
வெறும் சந்தகங்கள் மற்றும் யூகங்களின் அடிப்படையில் மேடாஸை அரசு கையகப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும், கணக்கு வழக்குகளை வேண்டுமானால் சரி பார்த்துக் கொள்ளட்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.