கொரிய கப்பல் இன்று கன்னியாகுமரியில் ஆய்வு
கன்னியாகுமரி: விஷ மீன் உண்டு நான்கு ஊழியர்கள் இறந்த விவகாரத்தில் கொரிய கப்பலை சோதனை செய்ய இன்று மெர்க்கன்டைல் மரைன் அதிகாரிகள் கன்னியாகுமரி வருகின்றனர்.
சமீபத்தில் குஜராத்தில் இருந்து 16 ஊழியர்களுடன் கொரிய கப்பல் ஒன்று கன்னியாகுமரி வழியாக வந்து கொண்டிருந்தது. கன்னியாகுமரிக்கு அருகில் வந்த போது கப்பல் நடுக்கடலில் தள்ளாடியது. அதிலிருந்தவர்கள் அனைவரும் மயக்கமடைந்தனர்.
தகவலறிந்த கன்னியாகுமரி போலீசார் மருத்துவ குழுவுடன் உதவிக்கு சென்றனர். அதில் 4 ஊழியர்கள் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் விஷமீன்களை சாப்பிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கப்பலில் இருந்த உணவு பொருட்களின் சாம்பிள்கள் எடுக்கப்பட்டு சென்னை கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு சோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கப்பலில் இருந்த உணவு பொருட்களை கரைக்கு கொண்டு வந்து அழித்து விட முடிவு செய்யப்பட்டது.
சோதனை அறிக்கை வந்தபின்னரே கபபல் அங்கிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே கப்பலை ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து மெர்க்கன்டைல் மரைன் அதிகாரிகள் இன்று கன்னியாகுமரி வருகின்றனர். அவர்கள் சான்று அளித்த பின்பே கப்பல் புறப்படும்.












Click it and Unblock the Notifications