தூத்துக்குடி அருகே லாரி கவிழ்ந்து 4 பேர் பலி
விளாத்திகுளம்: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே லாரி கவிழ்ந்ததில் நான்கு பேர் பலியானார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மேல்மாந்தையிலுள்ள பெத்தநாச்சியம்மன் கோவிலில் மாசி திருவிழா நடைபெற உள்ளது.
விழாவையொட்டி கோவிலில் சமையல் செய்வதற்கு மதுரை மீனாட்சியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பாத்திமா, அவரது மகன் அல்லாபிச்சை ஆகியோர் தலைமையில் அதே பகுதியை சேர்ந்த சாமிநாதன், குழந்தை வேலு, செந்தில் உள்பட 7 பேர் வந்தனர்.
அங்கிருந்து மேல்மாந்தைக்கு செல்லும் கடைசி பஸ் சென்று விட்டதால் அல்லாபிச்சை உள்பட 7 பேரும் அந்த வழியாக வேம்பாருக்கு சென்று கொண்டிருந்த லாரியை மறித்து ஏறிக் கொண்டனர். தங்களை மேல்மாந்தையிலுள்ள கோவில் அருகே இறக்கிவிடுமாறு கூறியுள்ளனர்.
செந்தில் உள்பட 4 பேர் லாரியின் பின்பகுதியிலும், குழந்தைவேலு, அல்லாபிச்சை, பாத்திமா ஆகியோர் முன்பகுதியிலும் இருந்தனர்.
விளாத்திகுளம் அரியநாயகிபுரம் அருகே சென்றபோது லாரி திடீரென டிரைவரின் கட்டுபாட்டை மீறி தாறுமாறாக ஓடி நடுரோட்டில் கவிழ்ந்தது.
இதில் லாரியில் மேல் இருந்த கல் விழுந்து அழுத்தியதில் சாமிநாதன், செந்தில் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். லாரி டிரைவர் பந்தல்குடியை சேர்ந்த பெருமாள் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் விளாத்திகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜ், அங்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களையும், காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 5 பேரையும் மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இருவர் பலியானார்கள். குழந்தைவேலு, பாத்திமா, அல்லாபிச்சை ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.