Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழர் ஆதரவு போராட்டத்தை ஒடுக்கும் முயற்சி-ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையிலிருந்து திசை திருப்புதவற்காக போலீஸார் திட்டமிட்டு உயர்நீதிமன்றத்தில் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வரலாறு காணாத வகையில், வன்முறை நிகழ்வுகள் நடந்துள்ளன. தொலைக்காட்சி நேரலை காட்சிகளைப் பார்க்கும் போது, நீதிமன்ற வளாகத்திற்குள் காவலர்கள் காட்டு தர்பார் நடத்தியிருக்கிறார்கள் என்பது நன்றாகப் புலனாகிறது.

காவலர்களின் தாக்குதல்களில் நீதிபதிகள் கூடத் தப்பவில்லை என்கிற செய்தி நம்ப முடியாததாகவும், பெரும் அதிர்ச்சி தருவதாகவும் உள்ளது.

சில நீதிபதிகள் பாதுகாப்பு தேடி ஓடி ஒளியும் அவல நிலைமையும் ஏற்பட்டது என்பது தமிழக வரலாற்றில் நீங்காத களங்கத்தையும், கறையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

காவலர்களின் இந்த அத்துமீறலை வர்ணிப்பதற்கும், கண்டிப்பதற்கும் வார்த்தைகளே இல்லை.

உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல்களைப் பார்க்கும்போது, இதற்கு பின்னணியில் பெரும் சதித் திட்டம் இருக்கக் கூடும் என்று சந்தேகிக்க இடமிருக்கிறது.

தமிழகத்தில் இன்று கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர் ஆதரவுப் போராட்டத்தில் தளகர்த்தர்களாக களத்தில் நின்று வழக்கறிஞர்கள் போராடி வருகிறார்கள்.

அவர்களது போராட்டத்தினால், ஈழத் தமிழர் ஆதரவு போராட்டம் தொய்வின்றி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

இந்தப் போராட்டத்தை களங்கப்படுத்திவிட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் சிலர் செயல்பட்டிருப்பதும், அதன் தொடர்ச்சியாக காவலர்கள் இந்த காட்டு தர்பாரை நடத்தியிருப்பதும் முழுமையாக விசாரித்து அறியப்பட வேண்டும்.

விசாரணைக்கே ஏற்றுக் கொள்ளப்படாமல் இருந்த ஒரு வழக்கில் தம்மையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சுப்பிரமணியசாமி நீதிமன்றத்திற்கு வந்தது முதல், அனைத்து நிகழ்வுகளும் விசாரிக்கப்பட வேண்டும். அவர் நீதிமன்றத்திற்கு வந்த நாளில் அவர் மீது முட்டை வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த நாடகம் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்.

சம்பவங்கள் அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான வழக்கறிஞர்களின் போராட்டத்தை திசை திருப்பவும், அதற்கு களங்கம் ஏற்படுத்தவும் திட்டமிட்டு சதி நடந்திருக்கிறது என்றும் அதன் விளைவாகத்தான் காவல்துறையினரின் இத்தகைய அத்துமீறல்கள் அரங்கேற்றப்பட்டிருக்கிறது என்றும் சந்தேகிப்பதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன.

எனவே, நேற்றைய சம்பவங்கள் மற்றும் அதற்கு காரணமான முந்தைய நிகழ்வுகள் ஆகியவை அனைத்தும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையிலேயே இந்த விசாரணை நடைபெற வேண்டும்.

விசாரணை முடிகிற வரையில், மாநிலக் காவல்துறை தலைவர், சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., மாநகர காவல்துறை ஆணையர், இணை ஆணையர், துணை ஆணையர் மற்றும் சம்பவத்தின் போது உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் சென்ற அனைத்து காவல்துறை அதிகாரிகளும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கோரியுள்ளார் ராமதாஸ்.

மருத்துவமனையில் ராமதாஸ் ஆறுதல்:

இந் நிலையில் போலீஸ் தாக்குதலில் காயமடைந்து அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வழக்கறிஞர்களை ராமதாஸ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது வழக்கறிஞர்கள், நாங்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தான் எங்களை போலீசார் தாக்கினர் என்றன்ர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ்,

இலங்கையில் ஈழத்தமிழர்கள் கடுமையாக தாக்கப்பட்டு வருகிறார்கள். அதை தடுத்து நிறுத்தவும் அவர்களை காப்பாற்றவும் யாரும் முன் வரவில்லை. அந்த அப்பாவி தமிழர்களுக்காக நமது தமிழக வக்கீல்கள் போராடி வருகின்றனர்.

போராட்டத்தை திசை திருப்புவதற்காக போலீசார் வக்கீல்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

இது கண்டிக்கத்தக்கது. போலீசார், வக்கீல்களை தாக்கும் போது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவா போராடுகிறாய் என்று கூறி தாக்கியுள்ளனர். இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான போராட்டத்தை ஒடுக்கும் நோக்கத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் தொடர்புடைய அனைத்து போலீசார் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் வக்கீல்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் யாருடைய உயிருக்கு தான் பாதுகாப்பு இருக்கிறது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+