'ஹேக்' சர்வதேச நீதிமன்றம் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
தி ஹேக்: ஹாலந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச போர்க் குற்றங்களுக்கான டிரிப்யூனல் முன்பு தமிழர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதன்கிழமை இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இனப்படுகொலையில் ஈடுபட்டு வரும் அதிபர் ராஜபக்சே, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சே, ராணுவத் தளபதி தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து தண்டிக்குமாறு கோரி தமிழர்கள் கோஷமிட்டனர்.
ராஜபக்சே, கோத்தபாய, சரத் பொன்சேகா ஆகியோரின் உருவப்பொம்மைகளும் நீதிமன்றத்தின் முன்பு தூக்கில் தொங்கவிடப்பட்டு இறுதியில் மக்கள் காலால் மிதித்தும் செருப்பால் அடித்தும் தங்கள் கோபத்தை தீர்த்துக்கொண்டனர்.
மேலும், தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமார், முருகதாசன், இலங்கை குண்டு வீச்சில் பலியான தமிழ் பத்திரிக்கையாளர் சத்தியமூர்த்தி ஆகியோரது உருவப் படங்களுக்கு மலரஞ்சி செலுத்தியும், போராட்டக்குழுவினர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் சர்வதேச போர்க் குற்றங்களுக்கான டிரிப்யூனலிடம் தமிழர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அதில், அனைத்துலகத்தால் போர்க் குற்றங்கள் எனத் தெரிவிக்கப்படுகின்ற மருத்துவமனைகளின் மீது குண்டுகளை வீசுவது, தடை செய்யப்பட்ட கிளஸ்டர், பாஸ்பரஸ் குண்டுகளை வீசித் தாக்குவது, அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினை வெளியேற்றியது போன்ற போர்க் குற்றங்களைப் புரிந்து தமிழின அழிப்பை மகிந்த அரசானது தொடர்ந்து புரிவதாக ஆதாரங்களுடன் இந்த நீதிமன்றத்தின் உள்ளே வழக்கைத் தொடுக்கும் அதிகாரியிடம் இந்த மனுவும் ஒப்படைக்கப்பட்டு மகிந்த அரசு மீது வழக்கைத் தொடுத்து அவர்களை இங்கு அழைத்து விசாரிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
காணாமல் போவதற்கு எதிரான அமைப்பின் ஹாலந்து கிளை இந்தப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.