மாயாவதி முன்னிலை-பாஜக நிலை மோசம்: கருத்து கணிப்பு
இங்கு பாஜக 19 சதவீத மக்கள் ஆதரவுடன் மூன்றாவது இடத்திலும் காங்கிரசுக்கு வெறும் 17 சதவீதத்தினரின் ஆதரவு மட்டுமே இருப்பதும் தெரியவந்துள்ளது.
இங்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு கட்சிகளும் தனித்து நின்றால் மாயாவதிக்கே அதிக இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிகிறது.
மாயாவதியை சமாளிக்க அமர்சிங்குடன் எவ்வளவு சண்டை, முட்டல் மோதல்கள் வந்தாலும் முலாயம் சிங்குடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தே ஆக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் மாயாவதிக்கு 5 சதவீத ஆதரவு சரிந்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரசுக்கு 8 சதவீதம் ஆதரவு அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது. (இதை காங்கிரஸ்காரர்களுக்கே அதிர்ச்சி தான்!).
ஆனால், சமாஜ்வாடி கட்சியின் செல்வாக்கில் வளர்ச்சியோ, தேய்வோ இல்லை. அதே 25 சதவீத ஆதரவு நீடிக்கிறது. அதே நேரத்தில் பாஜகவுக்கு ஒரு சதவீத ஆதரவு அதிகரித்துள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், மாயாவதிக்கு பிராமணர்கள் அல்லாத உயர் சமூகத்தினரின் வாக்குகளில் 5 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளதும் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே 3 சதவீத இழப்பும் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதே போல பிற்பட்டவர்களிடையே பாஜகவுக்கும் 4 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் உயர் ஜாதியினரில் பாஜகவை ஆதரிப்போர் 1 சதவீதம் அதிகரித்துள்ளனர்.
அதே நேரத்தில் பிற்பட்டவர்களிடையே 5 சதவீத ஆதரவை பெருக்கிக் கொண்டுள்ள சமாஜ்வாடி கட்சிக்கு உயர் ஜாதியினர், தலித் மக்கள் மத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதில் யாருமே எதிர்பாராத ஒரு ஆச்சரியம் காங்கிரசுக்கு அதிகரித்துள்ள ஆதரவு தான். உயர் ஜாதியினர் மத்தியில் 16 சதவீதமும், பிற்படுத்தப்பட்டவர்களிடையே 9 சதவீதமும், தலித்களிடையே 11 சதவீதமும் காங்கிரசுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. ஆனால், தனித்துப் போட்டியிட்டால் அந்தக் கட்சி அதோ கதி தான் என்கிறது கருத்துக் கணிப்பு.
அதே போல பாஜகவுக்கும் இந்த மாநிலத்தில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. அந்தக் கட்சியுடன் கூட்டணி சேர மாயாவதி தயாராக இல்லாத நிலையில் வரும் தேர்தலில் அந்தக் கட்சிக்கு உத்தரப் பிரதேசம் பெரிய அளவில் உதவப் போவதில்லை.
சமாஜ்வாடி, காங்கிரஸ் கூட்டணி ஏற்படாவிட்டால் மட்டுமே பாஜகவால் கொஞ்சமாவது சமாளிக்க முடியும். இந்தக் கூட்டணி வந்துவிட்டால் மூன்றாவது இடத்துக்கு பாஜக தள்ளப்படுவது நிச்சயம் என்கிறது கருத்துக் கணிப்பு. பாஜகவின் முக்கிய ஓட்டு வங்கியான பிராமணர்கள், முற்பட்ட சமூகத்தினர் மாயாவதி பக்கம் சாய்ந்துவிட்டதே இந்தக் கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது இவர்கள் மாயாவதியிடமிருந்து மெல்ல விலகினாலும் அவர்கள் பாஜகவை விட காங்கிரசையே அதிகம் ஆதரிப்பது கருத்துக் கணிப்பில் தெரிகிறது.