மணல் லாரி மோதி 5 வயது சிறுமி பலி!
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மணல் லாரி மோதியதில் 5 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருத்தணி அருகே உள்ளது தாழவேடு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் அபி (எ) அபிநயா (5).
அபி மதிய நேரத்தில் பக்கத்தில் உள்ள தனது பெரியப்பா வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக அசுர வேகத்தில் கட்டுப்பாடு இன்றி ஒரு மணல் லாரி வந்தது.
அந்த லாரி சிறுமி அபிநயா மீது மோதியது. இதில் தலை நசுங்கி அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் ஆவேசம் அடைந்த அக் கிராம மக்கள் சுமார் 300 பேர் திருத்தணி - நாகலாபுரம் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த ஆர்.டி.ஓ., தாசில்தார், டி.எஸ்.பி. ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு மறியல் செய்த மக்களுடன் சமரச பேச்சு நடத்தினார்கள்.
விபத்து நடந்த இடத்தில் ஏற்கனவே 4 குழந்தைகள் பலியாகியிப்பதால், அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications