திமுக ஆட்சியைக் கலைக்க திட்டமிட்டு வன்முறை செய்கிறார்கள் - கருணாநிதி
சென்னை: திமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்பதற்காக சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க திட்டமிட்டு வன்முறையை பரப்புகிறார்கள் என்று முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை பாடி சந்திப்பில் ரூ. 125 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுற்றுவட்ட மேம்பாலம் திறப்பு நிகழ்ச்சி நேற்று பாடி சிங்காரம் பிள்ளை பள்ளி வளாகத்தில் நடந்தது.
வீடியோ கான்பரன்ஸ் மூலம் பாலம் திறப்பு
போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் முதுகு வலி காரணமாக அறுவைச் சிகிச்சை செய்து ஓய்வெடுத்து வரும் முதல்வர் கருணாநிதி, வீடியோ கான்பரன்சிங் மூலம் பாலத்தைத் திறந்து வைத்தார். மேலும் வீடியோ கான்பரன்சிங் மூலமாகவே முதல்வர் உரை நிகழ்த்தினார்.
அப்போது முதல்வர் பேசுகையில்,
இன்றைய தினம் நடைபெறுகின்ற இந்த நல்லவிழாவில் நேரில் கலந்து கொண்டு உங்களோடு பங்கு பெற முடியாமல், உடல்நிலை காரணமாக சென்னை போரூர் மருத்துவமனையில் இருந்தவாறு- இந்த உயர்மட்ட சுற்று மேம்பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
2005-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந் தேதிதான் இந்த மேம்பாலத்திற்கான அடிக்கல் என்னால் நாட்டப்பட்டது என்பதும்- இந்த நான்காண்டு காலத்திற்குள் இந்த மேம்பால பணிகள் முடிவுற்று அதன் திறப்பு விழா என்னால் நடைபெறுகிறது அதுவும் என்னால் நடைபெறுகிறது என்பதும் பாராட்டுதற்குரிய, போற்றுதற்குரிய பாலுவை வாழ்த்துவதற்குரிய செய்திகளாகும்.
எத்தனையோ அடிக்கல்கள்- அடிக்கல்களாகவே ஆண்டுக்கணக்கில் இருந்திடும் நிலையில்- இந்த ஆட்சியின் பெருமைக்குரிய சாதனைகளாக பல மேம்பாலங்கள், சாலைகள் ஒரு சில ஆண்டுகளுக்குள் நடைபெற்று முடிந்து அதன் திறப்பு விழாக்கள் நடைபெறுவது நாம் கண்கூடாக கண்டு வருகின்ற ஒன்றாக தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை பிரிவுகளில்- மத்திய கப்பல், சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பணியாற்றும் டி.ஆர்.பாலுவின் சாதனைகளுக்கு எடுத்துக்காட்டாக இது போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெறுவது என் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகின்ற செயலாகும். அதற்கு காரணமான அவரைப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
இத்தகைய அரும்பணிகள் பல தி.மு.க. ஆட்சியிலே தமிழகத்தில் நடைபெற்று, மக்களுக்காகவே இந்த ஆட்சி அமைந்து- மக்களுக்காகவே பாடுபட்டு வருகின்ற இந்த நேரத்தில் இந்த சர்க்காரை கவிழ்க்க வேண்டுமென்று சில சதிகாரர்கள் திட்டமிட்டு செய்கின்ற வேலைகளை- திட்டமிட்டு நடத்துகின்ற வன்முறை செயல்களை மருத்துவமனையிலே இருந்தவாறே நான் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும்தான் இருக்கின்றேன்.
அவர்களுக்கென்று சில பத்திரிகைகள் துணை போகின்றன என்பதை எண்ணும் போதும், சில கட்சிக்காரர்கள் துணை போவதாக இருப்பதும் நாட்டில் நல்ல பரிபாலனத்தை செய்து வருகின்ற ஒரு அரசுக்கு இது போன்ற தொல்லைகளைத் தர நினைப்பதும் சரியல்ல.
நேர் வழியில் பயணிப்போம்
அவர்கள் என்னதான் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டாலும், சதி வேலைகளில் ஈடுபட்டாலும், அதற்காக பயப்படாமல் நம்முடைய பயணம் நேர்மையான பயணம், நிச்சயமான பயணம்- அந்தப்பயணத்தை தொடர்ந்து நடத்துவோம். அதற்கு இந்த மேம்பாலங்கள் பயன்படும் என்று கூறி, டி.ஆர்.பாலுவை இதற்காக வாழ்த்தி, அமைச்சர் அன்பழகனுக்கும் மற்ற விருந்தினர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் கூறி விடைபெறுகின்றேன் என்றார் முதல்வர்.
நிகழ்ச்சியி்ல் மத்திய கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, மாநில அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் வேங்கடபதி, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர் பிரிஜேஷ்வர் சிங், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலர் பிரம்மதத், அமைச்சர் கே.பி.பி.சாமி, சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications