தீக்குளித்து உயிர் தியாகம் செய்ய வேண்டாம் - அன்பழகன் அறிவுரை
சென்னை: இலங்கைத் தமிழர்களைக் காக்கக் கோரி யாரும் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்யக் கூடாது என்று தமிழக நிதியமைச்சர் க.அன்பழகன் வேண்டுகோள் விடுத்தார்.
ஈழத் தமிழர்களை காக்கக்கோரி நேற்று திமுக இளைஞர் அணி மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தியது.
அதில் கலந்து கொண்ட சென்னை தரமணியைச் சேர்ந்த தி.மு.க. தொண்டர் சிவப்பிரகாசம் திடீரென தீக்குளித்து விட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் மரணமடைந்தார்.
தரமணியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக சிவப்பிர காசத்தின் உடல் வைக்கப்பட்டிருந்தது.
தி.மு.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான அன்பழகன், ராஜ்யசபா எம்.பி. கனிமொழி ஆகியோர் இன்று சிவப்பிரகாசத்தின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் ரூ.2 லட்சம் நிதியை அவரது மனைவி மனோரமாவிடம் அமைச்சர் அன்பழகன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஈழ தமிழர்களுக்காக இது போன்று யாரும் உயிர்த்தியாகம் செய்யக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.