திமுக தொண்டர் தீக்குளித்து மரணம் - வைகோ இரங்கல்
சென்னை: தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த திமுக தொண்டரின் குடும்பத்தினருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
சென்னையில் தி.மு.க.வை சேர்ந்த சிவப்பிரகாசம் என்ற அண்ணாவின் தம்பி தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்துள்ளார்.
ஈழத் தமிழர்களைக் காக்க தன் உயிரையும், உடலையும் நெருப்புக்குத் தாரைவார்த்த அந்த உத்தமரின் தியாகம் பூசிக்கத்தக்கது.
வாழ்ந்து போராடுவோம், உயிர்களை அழித்துக்கொள்ளாதீர்கள், தீக்குளிக்காதீர்கள் என்று தமிழர்களை மன்றாடி வேண்டுகிறேன்.
தன் மனைவி-மக்களை, குடும்பத்தினரை, உற்ற தோழர்களை கண்ணீரில் கதறவிட்டு நெருப்பில் துடி துடித்து மாண்ட வீரத் தியாகி சிவப்பிரகாசத்திற்கு வீர வணக்கம் செலுத்துகிறேன்.
துயரத்தில் பரிதவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.