கருணாநிதியின் கட்டுப்பாட்டில் போலீஸ் இல்லை- ஜெ!

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே ஒரு சுய நோக்கத்தின் அடிப்படையில் "உண்ணாவிரதம்'' நாடகத்தை மருத்துவமனையில் துவக்கப் போவதாக
அறிவித்ததோடு மட்டுமல்லாமல், சட்டத்தை நிலை நாட்ட வேண்டிய ஒரு முதலமைச்சர் காவல் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டிருப்பது இதுவரை கண்டதில்லை.
தமிழ்நாட்டில் எந்தவொரு காரியத்திற்காக அமைதியாக யார் கிளர்ச்சி நடத்தினாலும், அவர்களை வன்முறையாளர்களாக மாற்றி, சட்டம்-ஒழுங்கு கெடுவதற்கு வழி வகுத்து, திமுக ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்று கனவு காண்பதாக தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த 33 மாத கால திமுக ஆட்சியில், சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் உட்பட பல வன்முறை நிகழ்ச்சிகளை கைகட்டி வேடிக்கை பார்த்தவர்கள் தமிழகக் காவல்
துறையினர் என்பதை இந்த நாடு நன்கு அறியும். இவ்வாறு பல நிகழ்ச்சிகளை பார்த்து தான் அவர்களே வன்முறையாளர்களாக மாறிவிட்டனர்.
"இந்த ஆட்சிக்கு எதிராக தூண்டிவிடப்படும் சதிச் செயலில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறை நண்பர்களும் அறியாமல் பலியாகி விடக் கூடாது'' என்று தன்னுடைய அறிக்கையின் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இதிலிருந்து காவல் துறை தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை என்பதை கருணாநிதியே ஒப்புக்கொண்டுள்ளார்.
"தூண்டிவிடுகின்ற கும்பலைப் பற்றி கவலைப்படாமல் ஒன்றுபடுங்கள், ஒத்துழையுங்கள்'' என்று தன்னுடைய அறிக்கையின் மூலம் உபதேசம் செய்திருக்கிறார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வன்முறை வெறியாட்டம் நடத்துவதற்கான அறிவுரையை உள் துறைச் செயலாளர் மூலம் காவல்துறையினருக்கு தெரிவித்ததே முதலமைச்சர் கருணாநிதி தான் என்று எஸ். துரைசாமி என்ற ஒரு வழக்கறிஞர் சென்னை, எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறாரே?.
இது குறித்து முதலமைச்சர் கருணாநிதி எதையும் தெரிவிக்கவில்லையே?. நடத்தப்பட்ட தாக்குதலின் காரணமாக பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு இந்த அரசு இழப்பீடு வழங்குமா?.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் காவல் துறையினரால் சூறையாடப்பட்டதற்கு இந்த அரசு இழப்பீடு வழங்குமா?.
தவறு செய்த காவல் துறையினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இதற்கெல்லாம் மக்கள் தக்க பதிலை எதிர்பார்க்கிறார்கள்.
காவல் துறையினரும், வழக்கறிஞர்களும் ஒன்றுபட முடியாவிட்டால், ஒன்றுபடுகிறோம் என்று இணக்கம் தெரிவிக்கின்ற வரையில், மருத்துவமனையிலேயே உண்ணாநோன்பு இருக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்
கருணாநிதியின் அறிக்கையிலிருந்து தவறு செய்த காவல் துறையினர் மீது நடவடிக்கை இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது. ஆக, தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. காவல் துறை கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லை என்று அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
காவல் துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதும் அவருக்குத் தெரியவில்லை. இதிலிருந்து கருணாநிதி தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை என்பது தெரிய வருகிறது என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications