தமிழர்களுக்கு மருந்துகள்-பிரதமருக்கு கருணாநிதி கோரிக்கை
சென்னை: ஈழப்போரில் காயமடைந்து சிக்கி தவிக்கும் 10 ஆயிரம் அப்பாவி தமிழர்களை காப்பாற்ற உடனடியாக மருந்து பொருட்கள் அனுப்பி வைக்க வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதி, பிரதமருக்கு தந்தி கொடுத்துள்ளார்
இலங்கையில் வாழ்க்கைக்காக போராடி வரும் தமிழர்களை காக்க மருந்து பொருட்களை உடனடியாக அனுப்ப வேண்டும் என கருணாநிதி நேற்று பிரதமருக்கு தந்தி அனுப்பியுள்ளார். அதன் நகல்களை காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும், வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப்புக்கும் அனுப்பியுள்ளார்.
அதில்,
இலங்கை நடைபெற்று போர் பகுதிகளில் இருந்து இதுவரை 36 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் 10 ஆயிரம் பேருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது.
அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து பொருட்கள் இலங்கையில் இல்லை. மனிதாபிமானம் கருதி அவர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும். இவர்களை தவிர்த்து போர்ப் பகுதிகளில் இருக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலத்த காயங்களுடன் சிக்கியுள்ளனர்.
இலங்கைத் தமிழர்களுக்கு மருந்துகளை அனுப்பும் பணியில் மத்திய அரசுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு உதவத் தயாராக இருக்கிறது.
திறமை வாய்ந்த மருத்துவர்களையும், அறுவைச் சிகிச்சை நிபுணர்களையும், துணை மருத்துவ சேவைப் பிரிவைச் சேர்ந்தவர்களையும் அனுப்ப வேண்டும்.
தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்களையும், மருத்துவ ஊழியர்களையும் இலங்கையில் காயத்தால் அவதிப்படுபவர்களுக்கு உதவும் பொருட்டு அனுப்ப தயாராக இருக்கிறோம். அங்கு தமிழர்களுக்கு இந்தியா சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட வேண்டும்.
இதற்காக, இலங்கை அரசுடன் பேசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் விரைவாக நடக்க வேண்டும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications