மின் நிலையம்: மீனவர்களுக்கு பாதிப்பில்லை-அரசு
உடன்குடி: உடன்குடியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அனல்மின் திட்டத்தால் மீனவர்களுக்கு எந்த சிக்கலும் வராது என தமிழக மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி தெரிவி்த்துள்ளார்.
உடன்குடியில் புதிய அனல்மின் நிலைய திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அதில் பங்கேற்று அடிக்கல் நட்டிய தமிழக மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி பேசுகையில்,
தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பின்னர் 7 தொழிற்சாலைகள் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஓப்பந்தம் போடப்பட்டு, அவை துவங்கப்பட்டுள்ளது.
இதனால் ஆண்டுக்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடுதலாக தேவைப்படுகிறது. இதற்காக முன்கூட்டியே போடப்பட்டுள்ள திட்டங்கள்படி வடசென்னையில் 1200 மெகாவாட் மின் உற்பத்தியும், மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தியும், செய்வதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் துணையுடன் வள்ளூரில் 1500 மெகாவாட் முன் உற்பத்தியும், தூத்துக்குடியில் 1000 மெகாவாட் மின் உற்பத்தியும், உடன்குடியில் 1600 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யாறில் 4000 மெகாவாட் மின் உற்பத்தியும், என மொத்தம் 12 ஆயிரத்து 300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
உடன்குடி அனல்மின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் நிலக்கரிகள் வெளிநாடுகளில் இருந்து 30 சதவீதமும், இந்தியாவில் இருந்து 70 சதவீதமும் பெறப்பட்டு மின் உற்பத்தி துவக்கப்படும். இதனால் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் இல்லை.
உடன்குடி அனல்மின் நிலையத்தாலும், மணப்பாடு துறைமுகத்தாலும் மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. அப்படியே பாதிப்பு வந்தால் நீங்கள் கொடுக்கும் தண்டனையை நாங்கள் ஏற்க தயாராக இருக்கிறோம் என்றார் ஆற்காடு வீராச்சாமி.












Click it and Unblock the Notifications