சரிவுடன் துவங்கிய பங்கு வர்த்தகம்!
மும்பை: உலக பங்குச் சந்தைகள் ஒட்டுமொத்தமாக இன்று பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. பொருளாதார மந்தம் தன் உச்ச நிலையை நோக்கி நகர, பங்குச் சந்தைகள் முன்னெப்போதுமில்லாத மோசமான சரிவு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக வங்கி மற்றும் உலோகத் துறை பங்குள் மளமளவென வீழ்ந்து முதலீட்டாளர்களை தலையில் கைவைத்து உட்கார வைத்துவிட்டன. வாரத்தின் ஆரம்பமே இப்படி பயமுறுத்துகிறதே என புலம்புகிறார்கள் முதலீட்டாளர்கள்.
அமெரிக்காவின் டோவ் ஜோன்ஸ், ஆசியாவின் ஹாங்க் செங், சிங்கப்பூர் ஸ்ட்ரெயிட்ஸ், ஜப்பானின் நிக்கி போன்ற பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சியும், நிலையற்ற தன்மையும் காணப்பட்டது.
குறிப்பாக அமெரிக்காவின் டோவ் ஜோன்ஸ் 250 புள்ளிகளையும், நாஸ்டாக் 53 புள்ளிகள்யும் இன்று இழந்தது.
மகா சிவராத்திரி விடுமுறைக்குப் பின் செவ்வாய்க்கிழமை துவங்கிய இந்தியப் பங்குச் சந்தை சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தை நிப்டியில் எடுத்த எடுப்பிலேயே பெரும் வீழ்ச்சி நிலவியது. வர்த்கம் ஆரம்பித்த சில நிமிடங்களில் 213 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ். ஆனால் போகப்போக சற்றே மீளத் துவங்கி, வர்த்தகம் முடியும் போது 32 புள்ளிகள் குறைந்து 8810 -ல் நிலைபெற்றது. நிப்டி 5 புள்ளிகள் குறைந்து 2731-ல் முடிந்தது.
பஞ்சாப் நேஷனல் வங்கி, டிஎல்எப், ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ், ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் பங்குகள் இன்று பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தின.
பவர் கிரிட் மற்றும் ஹிந்துஸ்தான் லீவர் பங்குகள் மட்டும் ஓரளவு லாபம் தந்தன.