சென்னை: அரவாணிகளுக்கு தனி கழிப்பிடம்-மேயர்
சென்னை: சென்னை சைதாபேட்டையில் அரவாணிகளுக்கென்று பொது கழிப்பிடம் மற்றும் குழியலறை விரைவில் கட்டப்படும் என சென்னை மேயர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
அரவாணிகளுக்கு தமிழக அரசின் அரவணைப்பு தொடர்கிறது. அவர்களுக்கென்று தனி வாரியம், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு பயிற்சி ஆகியவற்றை வழங்கிய தமிழக அரசு சமீபத்தில் பட்ஜெட் அறிக்கையில் அவர்களுக்கு 1 கோடி ரூபாய் மதிப்பில் வீடுகள் கட்டி தரவும் உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று நடந்த சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் அரவாணிகளுக்கு பொது கழிப்பிடமும், குளியலறையும் விரைவில் கட்டித்தரப்படும் என மேயர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், கோத்தமேடு, திடீர் நகர் மற்றும் அதுமா நகர் குடிசை பகுதிகளில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட அரவாணி குடும்பத்தினர் தங்களுக்கு பொது சுகாதார கழிப்பிடம் வேண்டும் என்று மனு கொடுத்தனர். அதேபோல் பெரம்பூர் பகுதியில் இருக்கும் அரவாணிகளும் இந்த தேவை இருப்பதாக கோரிக்கை வந்தது.
இதையடுத்து சென்னையில் அவர்களுக்கு பொது கழிப்பிடமும், குளியலறையும் விரைவில் கட்டித்தரப்படும். சைதாபேட்டையில் மறைமலைஅடிகள் பாலத்துக்கு அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் சென்னை மாநகராட்சிக்கு மற்ற அனைத்து நகரங்களுக்கும் நல்ல முன்னுதராணமாக இருக்கும் என்றார் சுப்பிரமணியம்.












Click it and Unblock the Notifications