ரகளை செய்த அதிமுக எம்எல்ஏ தலைமறைவு
சங்கரன்கோவில்: நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் அரசு விழாவில் ரகளை செய்த அதிமுக எம்.எல்.ஏ கருப்பசாமியைத் தேடி போலீஸார் சென்னை விரைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் யூனியன் பகுதிகளில் அரசு நலத்திட்ட விழா நேற்று முன்தினம் மாலை யூனியன் அலுவலக வாளகத்தில் நடந்தது. இதற்காக அலுவலக வளாக பகுதியில் மேடை அமைக்கப்பட்டு பந்தல் போடப்பட்டிருந்தது.
விழாவிற்காக அச்சிடப்பட்டிருந்த அழைப்பிதழில் கலெக்டர் பிரகாஷ் தலைமையில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் தமிழரசி பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குவதாகவும், சங்கரன்கோவில் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கருப்பசாமி வாழ்த்துரை வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே போன்று பணிகளுக்கான அனைத்து கல்வெட்டுகளிலும் அவரது பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. இதேபோல் யூனியன் சார்பில் கொடுக்கப்பட்டிருந்த விளம்பரங்களிலும் எம்.எல்.ஏ. பெயர் இடம் பெற்றிருந்தது.
திமுக அமைச்சர் பங்கேற்கும் விழா அழைப்பிதழில் தனது பெயர் இடம் பெற்றதால் ஆத்திரமடைந்த எம்எல்ஏ காலையில் தனது ஆதரவாளர்களுடன் விழா நடைபெறும் யூனியன் அலுவலகத்திற்கு வந்து ரகளை செய்தார்.
டியூப் லைட், நாற்காலிகள் அடித்து நொறுக்கப்பட்டன. வாழைகள் வெட்டி சாய்க்கப்பட்டன. வழியில் புளியம்பட்டி விலக்கில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகளையும் வெட்டி சாய்த்து தீ வைத்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.
தகவல் அறிந்ததும் தாலுகா காவல் நிலைய போலீசார் விரைந்து வந்தனர். இதுகுறித்து யூனியன் ஆணையாளர் செல்வராஜன் தாலுக காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதேபோல் அலங்கார வளைவுக்கு எம்எல்ஏ கருப்பசாமி தலைமையிலான கும்பல் தீ வைத்ததாக புளியம்பட்டி திமுக செயலாளர் சேர்மன் மற்றொரு புகார் கொடுத்தார்.
இருபுகார்கள் தொடர்பாக இன்ஸ்பெக்டர் கிருஷ்டி ஜெயசில் விசாரணை நடத்தி அதிமுக கிளை செயலாளர் கருப்பசாமி, அவரது உதவியாளர் வைரவன், நம்பிராஜ், சரவணன், சவுந்திரராஜன், கோடீஸ்வரன் ஆகிய 6 பேரை கைது செய்து ஒரு பைக்கையும் பறிமுதல் செய்தனர். மேலும் சங்கரன்கோவில் எம்எல்ஏ கருப்பசாமி உள்பட 11 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க சென்னை சென்றுள்ள எம்எல்ஏ கருப்பசாமி கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.