கடைசி தமிழன் இருக்கும் வரை ஜெ ஆட்சிக்கு வர முடியாது-வீரபாண்டி

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்- காவல்துறையினருக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டிருப்பது வெட்கக் கேடானது என்றும் அது போன்ற ஒரு கையாலாகாத முதல்வரை இந்தியா இதுவரை கண்டதில்லை என்றும் அறிக்கை விட்டிருக்கிறார்.
சாட்டையடி ஜெ...
இது போன்ற அறிக்கைகளுக்கு முதல்வர் பதில் சொல்வதை விட என்னைப் போன்றவர்கள் பதில் கூறுவதுதான் பொருத்தமாக இருக்கும். ஜெயலலிதா அப்படி அறிக்கை வெளியிடாவிட்டால்தான் ஆச்சர்யம். அதிகாரிகளை சாட்டையால் அடித்து வேலை வாங்குகிறேன் என்று சட்டமன்றத்திலேயே சொன்னவருக்கு, வேண்டுகோள் விடுவது என்பது வெட்கக் கேடாகத்தான் இருக்கும்.
85 வயதான, இந்திய நாட்டின் மூத்த அரசியல்வாதியை, சோனியா காந்தி முதற்கொண்டு மன்மோகன் சிங் வரை ஏன் எதிர்க்கட்சியிலே உள்ளவர்கள் கூட மதித்து மரியாதை செலுத்தக் கூடியவரை 'கையாலாகாத முதலமைச்சர்' என்று சொல்லியிருக்கிறார்.
வெளிநாட்டுக்காரி...
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது பத்து மணிக்கே பிரதமர் தூங்கலாமா என்று கேட்டவர் தானே இவர்?. அவருடைய துணைவியார் சோனியா காந்தியை "வெளிநாட்டுக்காரி' என்றும், 'பதிபக்தி இல்லாதவர்' என்றும் தூற்றியவர் தானே இந்த ஜெயலலிதா?.
'செலக்டிவ் அம்னீசியா'.. மரம் வெட்டி...
அத்வானியை 'செலக்டிவ் அம்னீசியா' நோய்க்குச் சொந்தக்காரர் என்றும், நரசிம்மராவை 'ஜெனரேஷன் கேப்' உள்ளவர் என்றும், டாக்டர் ராமதாசை 'மரம் வெட்டி' என்றும், இன்னும் நாவலர் நெடுஞ்செழியன் (இவரை 'உதிர்ந்த ரோமம்' என்றார் ஜெ), எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களையும் இவர் திட்டவில்லையா?
எம்.ஜி.ஆரை பற்றி...
ஜெயலலிதா அரசியலில் நுழைய காரணமாக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை பற்றியே குறைசொல்லி ஆங்கிலத்தில் பிரதமர் ராஜீவ் காந்திக்கு கடிதம் எழுதவில்லையா?
கலைஞரைப் பார்த்தா கையாலாகாதவர் என்று அறிக்கை விடுகிறார்? மருத்துவமனையிலே இருந்து கொண்டே அன்றாடம் கோப்புகளைப் பார்த்துக் கொண்டு, அறிக்கைகளைத் தீட்டிக் கொண்டு ஒவ்வொரு மணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்கிற அவர் கையாலாகாதவரா?.
ஒவ்வொரு பங்களாவாக...
ஆறு மாதத்துக்கு ஒருமுறை ஒவ்வொரு பங்களாவாக பார்த்து ஓய்வெடுத்துக் கொண்டு, அறிக்கை விடுவதையே வாழ்நாள் பணி என்று செய்து கொண்டிருக்கும் நீ கையாலாகாதவரா? கேட்க மாட்டோமா?
தற்போது நடைபெறும் பிரச்சனையிலே கூட இரு சாராரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும், இல்லையேல் உயிருக்குத் துணிந்து உண்ணாவிரதம் இருப்பேன் என்று அறிக்கை விடும் என் தலைவன் எங்கே? வன்முறையின் மறு உருவம் என்று அவரைக் குற்றஞ்சாட்டத் துணியும் நீ எங்கே?
மீண்டும் கொள்ளையை தொடர...
முதல்வர் பதவியில் தொடர என் தலைவருக்கு அருகதை இல்லை என்று அறிக்கையிலே சொல்லியிருக்கிறாயே? எப்படியாவது ஆட்சியிலிருந்து அவர் சென்றுவிட வேண்டும், அங்கே நீ வந்து உட்கார்ந்து மீண்டும் கொள்ளையை தொடர வேண்டும் என்பதுதானே உனது நினைப்பு.
நடக்காது. கடைசித் தமிழன் இருக்கின்ற வரை மீண்டும் நீ ஆட்சிக் கட்டிலில் என்ற நினைப்பிற்கே இடமில்லை என்று கூறியுள்ளார் வீரபாண்டி ஆறுமுகம்.












Click it and Unblock the Notifications