புலிகள் தாக்குதலில் புதுக்குடியிருப்பில் 1000 ராணுவ வீரர்கள் பலி
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரம் விடுதலை புலிகளின் கைவசம் உள்ளது. இதை கைப்பற்ற இலங்கை ராணுவத்தினர் குண்டு மழை பொழிந்து வருகின்றனர். இருந்தாலும் புலிகள் அவர்களை எதிர்த்து கடுமையாக போரிட்டு வருகின்றனர்.
இலங்கை ராணுவத்தின் 53வது, 58வது, 59வது படைப் பிரிவுகளும் மற்றும் இரண்டு சிறப்பு படைப்பிரிவு என மொத்தம் ஐந்து பிரிவுகள் இந்நகரில் ஐந்து முனைகளில் இருந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
புதுக்குடியிருப்பு நகரைப் பிடித்து விட்டதாக ராணுவம் கூறியுள்ளபோதிலும் இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக அங்கு விடுதலை புலிகள் அதிரடி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சுமார் 1000 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 3 ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவத்தினர் படுகாயம் அடைந்துவிட்டதாகவும் விடுதலை புலிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று 21 தமிழர்கள் படுகொலை
இந்த நிலையில் நேற்று நடந்த ராணுவத் தாக்குதலில் 21 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
.
மாத்தளன் மருத்துவமனைக்கு அருகில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது நேற்று காலை 5 மணியளவில் சிறிலங்கா படையினர் பீரங்கி தாக்குதலை நடத்தினர்.
இதில் 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதலின் போது மருத்துவமனையின் சுவர் மற்றும் கூரை ஆகியவை சேதமடைந்தன. சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கி தாக்குதலில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 32 பேர் காயமடைந்துள்ளனர்.
புதுக்குடியிருப்பில் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்விடங்கள் மீது நேற்று பிற்பகல் சிறிலங்கா வான் படையின் மிக்-27 ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 வயதுச் சிறுவன் உட்பட 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.