பேச்சுவார்த்தைக்காக காத்திருந்த துரைமுருகன் - வராத வக்கீல்கள்
சென்னை: பேச்சுவார்த்தைக்காக நீண்ட நேரம் காத்திருந்தும் வக்கீல்கள் வரவில்லை என்று பொதுப்பணித்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. நேற்று நடந்த விவாதம்:
ஞானசேகரன் (காங்கிரஸ்):- போலீஸ்-வக்கீல்கள் மோதல் விவகாரத்தால் தற்போது கோர்ட்டில் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. பேச்சுவார்த்தைக்கு வக்கீல்களை அழைப்பது பற்றி ஆய்ந்தீர்களா? இதனால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வக்கீல்களும் மீண்டும் கோர்ட்டுக்கு போக துடிக்கிறார்கள். இந்த பிரச்சினையில் அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்று அவைக்கு, அரசு தெரிவிக்க வேண்டும்.
நிதி அமைச்சர் அன்பழகன்:- இந்த பிரச்சினையில் யார் மீது தவறு உள்ளது என்பதை முன்கூட்டியே சொல்ல முடியாது. விரிவான விசாரணைக்குப் பின்னரே முடிவெடுக்க முடியும். போலீசார்-வக்கீல் இருதரப்பினரும் பொதுமக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள்.
வக்கீல்கள், மீண்டும் பணிக்கு வரவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆலோசனை சொல்லியுள்ளார். எனவே, வக்கீல்கள் மீண்டும் பணிக்கு திரும்பவேண்டும். இதனை முதல்-அமைச்சர் சார்பில் நான் கேட்டுக் கொள்கிறேன். இதனை ஞானசேகரன் வழிமொழியவேண்டும்.
ஞானசேகரன்:- நான் வழிமொழிகிறேன்
சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன்:- வக்கீல் பிரதிநிதிகளுடன் பேசவேண்டும் என்பதற்காகத்தான் நானும், அதிகாரிகளும் இவ்வளவு நேரம் காத்திருந்தோம். அவர்கள் இதுவரை வரவில்லை. வரமுடியாது என்று செய்தியையும் அனுப்பவில்லை.
இந்த விவகாரத்தில் கோர்ட்டு சொன்னபடி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டோம். போலீஸ் அதிகாரியை மாற்ற வக்கீல்கள் கேட்டார்கள். அவரையும் மாற்றி விட்டோம். வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டதை மதிப்பிட குழுவும் அமைத்துள்ளோம்.
சுப்ரீம் கோர்ட்டில் நாளை (இன்று) இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த விஷயத்தில் வக்கீல்கள் உள்பட பல தரப்பினர் கோர்ட்டுக்கு சென்றுள்ளனர். இந்த ஆட்சியை கலைக்க பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் ஒரு அரசியல் கட்சியும் அங்கு வழக்கு தொடர்ந்துள்ள செய்தி இப்போது வந்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு அளிக்கும் தீர்ப்பை இந்த அரசு ஏற்கும் என்றார்.












Click it and Unblock the Notifications