சேது: சாமியார்களுக்கு பயந்து முடக்கம்-சிபிஐ
சென்னை: சாமியார்களுக்கு பயந்து சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றாமல் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு முடக்கி வைத்திருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் சட்டசபையில் இன்று குற்றம் சாட்டியது.
தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீது நடந்த விவாதம்:
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):
மத்திய அரசு சிறப்பான ஆட்சியை தந்திருக்கிறது. தமிழக அரசுக்கு ஏராளமான திட்டங்களுக்கு உதவி இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங்கும் தமிழக முதல்வர் கருணாநிதியும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார்கள். இதற்கு சில கட்சிகள் உடன் இருந்தே முதுகில் குத்தியதுதான் காரணம். சிலர் பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு ஓடி விட்டார்கள்.
பல நூறு ஆண்டுகள் போராடி பெற்ற சேது சமுத்திரத் திட்டம் இன்று முடக்கப்பட்டு அதற்கு காரணமான கட்சியுடன் கம்யூனிஸ்டுகள் கூட்டு சேர்ந்திருக்கிறார்கள்.
சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்): சாமியார்களுக்கு பயந்து சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றாமல் முடக்கி வைத்திருப்பது காங்கிரஸ் தான்.
சுதர்சனம் (காங்கிரஸ்): சேது சமுத்திரத் திட்டம் ஏன் நிறுத்தப்பட்டிருக்கிறது?. அதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதெல்லாம் சிவபுண்ணியத்திற்கு தெரியாதா?
பீட்டர் அல்போன்ஸ்: தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால், தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்பவே முடியாது. மேற்கு வங்க முதல்வர், மத்திய அமைச்சருடன் சேர்ந்து மத்திய அரசின் திட்டங்களை பாராட்டியிருக்கிறார். ஆனால் இங்கு பேசிய மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பாலபாரதிக்கு அந்த மனம் வரவில்லை. மனித நேயம் பற்றி பேசும் அவர்கள் ஆட்சி செய்யும் மேற்கு வங்காளத்தில் இன்றும் மனிதனை மனிதனே இழுக்கும் கை ரிக்ஷாக்கள் உள்ளன.
பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): மத்திய அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியதாக உறுப்பினர் சொல்கிறார். ஆனால் மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை.
பீட்டர் அல்போன்ஸ்: மத்திய அரசு தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட நெடுஞ்சாலைத்துறை திட்டங்களுக்கு மட்டும் ரூ.55,000 கோடி ஒதுக்கியுள்ளது. இது போல தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் மத்திய அரசு பெருமளவு நிதி வழங்கியுள்ளது.
சிவபுண்ணியம்: தமிழக அரசின் பட்ஜெட்டிலேயே பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு குறைவான நிதி ஒதுக்கும் சூழ்நிலை வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் அன்பழகன்: பொருளாதார நெருக்கடி காரணமாக அப்படி ஒரு நிலைமை வரலாம் என்று குறிப்பிட்டிருந்தாலும் தற்போது மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறிப்பிடத்தக்க வகையில் நிதி ஒதுக்கி உள்ளதுதான் உண்மை என்றார்.












Click it and Unblock the Notifications