மடிப்பிச்சை கேட்கும் கருணாநிதி- விஜயகாந்த் தாக்கு
சென்னை: சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய முதல்வரே, அதிகாரிகளிடம் மடிப்பிச்சை கேட்பதா என்று சாடியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல் நலம் பெறும்வரை மாநில நலன் கருதி அவர் விடுமுறை எடுத்துக் கொள்வதே நல்லது என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டபோது, போலீசார் அதை வேடிக்கைப் பார்த்தனர். இதையடுத்து போராட்டங்கள் நடைபெற்றதால் கல்லூரிகளுக்கும், விடுதிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தற்போது பிப்ரவரி 19ம் தேதி உயர் நீதிமன்றத்தில் போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் நடந்த வரலாறு காணாத மோதல் காரணமாக தமிழக நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வன்முறைகள் அரங்கேறி வருகின்றன. கருணாநிதியின் ஆட்சி அறவே செயலிழந்துவிட்டது.
மருத்துவமனையில் உள்ள முதல்வரால் நிலைமைகளைக் கண்டறிந்து செயல்படுவது கடினம். அப்படியிருக்க தனது பொறுப்புகளை அமைச்சர்களிடம் ஏன் ஒப்படைக்கவில்லை? ஒருவேளை தனது அமைச்சரவையில் அதற்கான தகுதி உடையவர்கள் இல்லையென்று கருதுகிறாரா?.
உயர் நீதிமன்ற கலவரம் காரணமாக உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக முதல்வர் கூறுகிறார். இது தன்மீது இரக்கத்தைத் தேடும் முயற்சியாக இருக்குமே தவிர பிரச்னைக்குத் தீர்வாகாது. முதல்வர் பொறுப்பில் இருக்கும் கருணாநிதி, யார் தவறு செய்தாலும் தண்டிக்கும் கடமையை நிறைவேற்ற வேண்டியவர்.
வழக்கறிஞர்களும், போலீசாரும் தமிழர்கள். எனவே தமிழர்களே ஒன்றுபடுங்கள் என்று கூறுவது பாதிக்கப்பட்டவர்களையும், பாதிப்பு ஏற்படுத்தியவர்களையும் ஒன்றாக கருதும் போக்காகும்.
தவறு யார் செய்திருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டியது நேர்மையான அரசின் கடமை. அதிகாரம் இருப்பது முதல்வர் கையில், முடிவு எடுக்க வேண்டியதும் அவர்தான். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய முதல்வரே அதிகாரிகளிடம் மடிப்பிச்சை கேட்பதா?.
தமிழர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருப்பதால் பதவியைத் துறக்க விருப்பமில்லை என்று முதல்வர் கூறுகிறார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இவர் எம்.எல்.ஏ. பதவியைத் துறந்ததை இன்னும் சொல்லிக் கொண்டிருக்கவில்லையா? பதவியை விடுவதனாலேயே பொறுப்பை விடுவதாக அர்த்தமில்லை.
மேலும் முதல்வர் கருணாநிதி, உடல் நலம் பெறும்வரை நாட்டு நலன் கருதி, தன்னிடம் உள்ள பொறுப்புகளை சக அமைச்சர்களுக்கு பகிர்ந்து அளித்துவிட்டு விடுமுறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications