பாக்-தேர்தலில் போட்டியிட ஷெரீப் சகோதர்களுக்கு தடை!

கடந்த 1999ல் அப்போதைய அதிபர் முஷராப்பை விமானத்துடன் நாடு கடத்த முயற்சி செய்ததாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. அவர் நாடு கடத்தப்பட்டார்.
பின்னர் ஒரு வழியாக நாடு திரும்பினார். ஆனால், தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடை நீக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்த பாகிஸ்தான் பொது தேர்தலில் பெரும்பான்மையான ஓட்டுக்களை அவரது கட்சி பெற்றது.
இத்தேர்தலில் மொத்தமுள்ள 270 தொகுதிகளில் படுகொலை செய்யப்பட்ட பெனசிர் புட்டோவின் கணவர் ஆசிப் அலி சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு 97 இடங்களும், ஷெரீப் கட்சிக்கு 71 இடங்களும் கிடைத்தன.
இவர்கள் இருவரும் இணைந்து அதிபர் முஷராப்பை பதவியிலிருந்து தூக்கினர். ஷெரீப்பின் ஆதரவுடன் சர்தாரி அதிபராக நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து தற்போதைய ஜனநாயக அரசு தன்னை மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் என நவாஸ் ஷெரீப் கனவு கண்டு வந்தார்.
ஆனால், இவரது கனவுக்கு பெரும் அடியாக வந்தது பாகிஸ்தான் உச்சி நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு ஒன்று. அதில், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது சகோதரரும், பஞ்சாப் மாநில முதல்வருமான ஷாபஸ் ஷெரீப்புக்கும் தேர்தலில் போட்டியிட தடை விதித்துள்ளது. இதையடுத்து அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஷெரீப்பின் வக்கீல் அக்ரம் ஷேக் கூறுகையில், உச்ச நீதிமன்றத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஷெரீப் தாக்கல் செய்த மனு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது அதே நிலைமை அவரது தம்பிக்கும் ஏற்பட்டுள்ளது. அதிபர் சர்தாரியின் உத்தரவுபடி தான் இந்த சதி திட்டம் அரங்கேறியுள்ளது என்றார்.
இதையடுத்து சர்தாரி மற்றும் ஷெரீப் இடையே இருந்து வந்த மோதல் வெளியுலகுக்குத் தெரிய வந்துள்ளது. இவ்விரு கட்சிக்கும் இடையே பிளவு அதிகமானதை அடுத்து பாகிஸ்தான் அரசியலில் மீண்டும் நிலையற்றதன்மை உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications