இட ஒதுக்கீடு மசோதா- இழுத்தடிக்கும் மத்திய அரசு
டெல்லி: மக்களவையில் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற தாமதம் செய்து வரும் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்து குரல் எழுப்பின. இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு மத்திய அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவில் கடைசியாக சில நிபந்தனைகள் மற்றும் திருத்தங்கள் சேர்க்கப்பட்டிருந்தன. அதற்கு கடும் எதிர்ப்பு உருவாகவே அதை நீக்கிவிட மத்திய அரசு ஒப்புக்கொண்டது. அதன் பிறகு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
இதையடுத்து நேற்று மத்திய அரசு இட ஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது. ஆனால், பிற்பகலில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் மேம்பாட்டுக்கான தேசிய கமிஷனிடம் கருத்து கேட்ட பின்னரே அது நிறைவேற்றப்படும் என கூறி, அதை திரும்ப பெற்றுக்கொண்டது.
இது தான் மத்திய அரசின் கடைசி கூட்டத் தொடர் என்பதால் இடஒதுக்கீடு மசோதா தாமதம் செய்யப்படுவதற்கு பகுஜன் சமாஜ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இம்முறை நிறைவேற்றபடவில்லை என்றால் அடுத்த ஆட்சியில் தான் மீண்டும் கொண்டு வர முடியும் என்பதால் மக்களவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
அப்போது பிரதமர் அலுவலக இணை அமைச்சர் பிருதிவிராஜ் பதிலளிக்கையில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள் நலனுக்கான தேசியக் கமிஷனிடம் கருத்துகேட்க வேண்டும் என்று சட்ட அமைச்சகம் காலையில்தான் உத்தரவு அனுப்பியது.
இதனால் இந்த மசோதாவை முன்னர் திட்டமிட்டபடி மக்களவையில் கொண்டுவர முடியவில்லை என்றார்.
இதற்கு அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான இணை அமைச்சர் வயலார் ரவி பதில் அளிக்கையில், இந்த மசோதா அரசின் பரிசீலனையில் இருக்கிறது என்று கடந்த 19-ம் தேதி தான் அறிவித்ததில் எந்த மாற்றமும் இல்லை என சுருக்கமாக கூறி முடித்து கொண்டார்.
அப்போது பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் ராஜேஷ் வர்மா கூறுகையில், காங்கிரஸ் கட்சி தலித் மக்களின் நலனில் அதிக அக்கறை காட்டவில்லை. இதனால் தான் வேண்டுமென்றே இந்த மசோதாவை தாக்கல் செய்வதில் தாமதம் செய்து வருகிறது. என்றார்.












Click it and Unblock the Notifications