ஜெவுக்கு மிரட்டல்-அதிமுக பிரமுகரிடம் விசாரணை
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வீட்டை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக மிரட்டல் வந்துள்ளதாக அதிமுக சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் உதவியாளர் கார்த்திகேயன் இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸ் உதவி கமிஷனரிடம் நேற்று மாலை புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நான், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வீட்டில் அலுவலக பொறுப்பாளராக பணிபுரிகிறேன். 25-ந் தேதி அன்று (நேற்று) நான் அலுவலக பணியில் இருந்தபோது ஜெயலலிதா பெயருக்கு தபால் மூலம் கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தின் மேல் உரையில் அனுப்புனரின் பெயரோ, முகவரியோ இல்லை.
ஆனால், அந்த கடிதத்தில், புரட்சி புலி இயக்கம்-தமிழ் இனத்தை அழிக்கும் உன் வீட்டை தரைமட்டமாக ஆக்குவேன், வெடி வைப்பேன், உன் அலுவலகத்தில் பைக் பாம்' வைப்பேன், சில நாளில் நீ, உன் வீடு காலி' இப்படிக்கு சி.மோகன் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.
இந்த கடிதத்தின் மூலம் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் உடனடியாக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறும், ஜெயலலிதாவுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற புகார் மனுக்களை முன்னாள் அமைச்சரும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளருமான ஜெயக்குமார், அரசு முதன்மை செயலாளரிடமும், சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திலும், கமிஷனர் அலுவலகத்திலும் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர்.
அதிமுக வட்டச் செயலாளரிடம் விசாரணை:
ஜெயலலிதா வீட்டுக்கு வந்த கடிதத்தில், 24352770 என்ற எண் இருந்தது. இந்த எண்ணை ஆராய்ந்ததில், சென்னை தியாகராய நகர் தாமஸ் ரோட்டில் வசிக்கும் சி.மோகன் என்பவரது முகவரியை கண்டறிந்ததாகவும், அந்த முகவரியில் உள்ள வீட்டில் விசாரித்த போது அங்கு வசிக்கும் மோகன் 114-வது வட்ட அ.தி.மு.க. இளைஞரணி செயலாளர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நான் இந்த கடிதத்தை அனுப்பவில்லை. எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் யாரோ எனது பெயரில் இக் கடிதத்தை அனுப்பியுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications