சுப்ரீம் கோர்ட் உத்தரவு-5 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை: உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று ஐந்து காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சென்னை உயர்நீதி்மன்றத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இணை ஆணையர்கள் சந்தீப் ராய் ரத்தோர், ராமசுப்ரமணி, துணை ஆணையர்கள் சாரங்கன், பிரேம் ஆனந்த் சின்ஹா உள்ளிட்ட ஐந்து அதிகாரிகளை சென்னையை விட்டு வேறு இடத்திற்கு மாற்றுமாறு உத்தரவிட்டது.
இதை ஏற்று நேற்று ஐந்து அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
- மத்திய சென்னை இணை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், மதுரை சரக டி.ஐ.ஜி யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- கோவை சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டு இருந்த ரவிக்குமார், மத்திய சென்னை இணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.
- ஏற்கனவே மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் இருந்த டி.ஐ.ஜி. ராமசுப்பிரமணி, கோவை சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் டாக்டர் எம்.சி.சாரங்கன் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.
- திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், கீழ்ப்பாக்கம் துணைக்கமிஷனர் ஆகிறார்.
- சென்னை பூக்கடை துணை கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, காஞ்சீபுரம் மாவட்ட சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா சென்னை பூக்கடை துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஜெயலட்சுமி புகழ்' ராஜசேகர் சஸ்பெண்ட்:
இதற்கிடையே சிவகாசி ஜெயலட்சுமி வழக்கில் சிக்கி சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் மீண்டும் பணியில் சேர்ந்த டி.எஸ்.பி. (தற்போது சென்னை நகர கூடுதல் துணை ஆணையர்) ராஜசேகர் திடீரென நேற்று இரவு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இவர் நாளையுடன் பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.