மதுரையில் கதர்கிராம ஊழியர்கள் உண்ணாவிரதம்!
மதுரை: பதவி உயர்வு, இடைக்கால நிவாரண ஊதியம் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் கதர்கிராம தொழில் வாரிய ஊழியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
தமிழ்நாடு கதர்கிராம தொழில்வாரிய ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தென்மண்டல அளவில் ஒருநாள் மதுரை மேலமாசிவீதி, வடக்கு மாசி வீதி சந்திப்பில் உண்ணாவிரதம் இருப்பது என முடிவு செய்யப்பட்டடது.
அதன்படி, இந்த கூட்டமைப்பின் மாநில அமைப்பு செயலாளர் நல்லசிவம் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரதத்தில் மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.
ஆறாவது ஊதியக் குழுவில் பரிந்துரை செய்யப்பட்டபடி 3 மாத ஊதிய இடைக்கால நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு கதர்கிராம தொழில் வாரியத்தை முன்பு இருந்ததுபோல அரசுத்துறையாக அறிவிக்க வேண்டும் என்றும், வாரியத்தில் அதிகப்படியாக இருக்கும் 862 ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளித்து வேறு துறைகளில் பணி வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என உண்ணாவிரதத்தின் போது கோரிக்கைவிடப்பட்டது.