'பழிவாங்கும் பேச்சு'-ஜெவுக்கு மீண்டும் நோட்டீஸ்
மதுரை: ஆட்சிக்கு வந்தால் போலீசாரை பழி வாங்குவேன் என்று பேசிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரை அன்புநகரை சேர்ந்தவர் பாண்டித்துரை என்பவர் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,
அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கடந்த 2006ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின்போது, போலீஸ் அதிகாரிகள் சிலர் திமுக பிரமுகர்களுக்கு பின்னணியாக இருந்து செயல்படுவதாகவும், அவர்களை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழிவாங்குவோம் என்றும் பேசி உள்ளனர்.
இவர்களது பேச்சு ஜனநாயக நெறிமுறைகளுக்கு புறம்பானதாகும். இவர்களது பேச்சால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வன்முறை ஏற்படும். எனவே ஜெயலலிதா, வைகோ ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆனால் இந்த மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து பாண்டித்துரை மதுரை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, எதிர் மனுதாரர்களான ஜெயலலிதா, வைகோ ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந் நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி செல்வம் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது வைகோ தரப்பில் நோட்டீஸ் பெறப்பட்டதாக நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ஜெயலலிதா தரப்பில் தங்களுக்கு நோட்டீஸ் வந்து சேரவில்லை என்று பதில் தரப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.