சீமான் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!
ஈழத் தமிழருக்கு ஆதரவாக புதுச்சேரியில் சட்டக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்தில் மாணவர்களை வாழ்த்திப் பேசிய இயக்குனர் சீமான் மீது, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசிதாக காங்கிரஸ் கட்சியினர் கூறிய புகாரின் அடிப்படையில் புதுச்சேரி போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இதைத் தொடர்ந்து அவரை புதுச்சேரி போலீசார் தேடி வந்தனர். போலீசார் சேடிக்கொண்டிருக்கும் போதே, சீமான் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடந்த ஈழத் தமிழர் ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக போலீசார் அறிக்கை சமர்ப்பித்தனர்.
இந் நிலையில் சீமான் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக வக்கீல்கள் நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இங்கும் இந்திய அரசுக்கு எதிராக அவர் பேசியதாக குறிப்பு அனுப்பப்பட்டது.
அந்த நேரத்தில்தான் அவரைக் கைது செய்வதற்கு புதுச்சேரி போலீசார் வந்தனர். ஆனால் அதற்குள் சீமான் தனது பேச்சை முடித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டார் சீமான்.
இதையடுத்து புதுச்சேரி போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். அச்சமயம் தானே நேரில் வந்து ஆஜராவதாக சீமான் அறிவித்தார்.
அதன்படி நெல்லை காவல்துறை ஆணையர் முன்பு சீமான் நேரில் சரணடைந்தார். நெல்லை கமிஷனர் மஞ்சுநாதா, சீமானை புதுச்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சீமானை புதுச்சேரி நீதிமன்றத் தீர்ப்பின் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
இந் நிலையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதாகக் கூறி சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நெடுமாறன் கடும் கண்டனம்:
இந் நிலையில் இன்று சீமானை சந்திக்க புதுச்சேரி காலாப்பட்டு சிறைக்கு வந்தார் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன்.
சீமானுடன் ஒரு மணி நேரம் பேசிவிட்டு வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
இயக்குனர் சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு ஏவி உள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களையும், திரை உலகை சேர்ந்தவர்களையும் ஒட்டு மொத்தமாக மிரட்டுவதற்காகவே சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை முதல்வர் கருணாநிதி ஏவி இருக்கிறார்.
இலங்கைத் தமிழர்களுக்காக பேசியதை தவிர தேசத்திற்கு எதிரான செயல்களில் சீமான் ஒருபோதும் ஈடுபடவில்லை. அவரின் பேச்சு விளைவாக எந்த இடத்திலும் எத்தகைய கலவரமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் அவர் மீது இந்த கொடிய சட்டத்தை பயன்படுத்தி இருப்பது அப்பட்டமான ஜனநாயக விரோத போக்காகும்.
சீமான் மீது போடப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கை உடனடியாக திரும்ப பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்றார்.