குட்டுபட்டது நினைவில்லையா?-கருணாநிதிக்கு ஜெ. பதிலடி
சென்னை: திமுக அரசுக்குத்தான் உச்ச நீதிமன்றம் நெற்றியடி கொடுத்திருக்கிறது. 2007ல் திமுக அரசை கலைக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்வோம் என உச்சநீதிமன்றம் குட்டியது அவருக்கு நினைவில்லையா என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியைக் கலைக்குமாறு கோரி அதிமுக அளித்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் ஏற்க மறுத்துவிட்டது. இதையடுத்து தமிழக முதல்வர் கருணாநிதி கடந்த 27ம் தேதி அதிமுகவினருக்கு யாரிடம் மனு கொடுக்க வேண்டும் என்பது கூட தெரியவில்லை என்பதை மேற்கொள்காட்டி, அதிமுகவுக்கு நீதிமன்றம் நெற்றியடி கொடுத்தது என்றார்.
அதற்குப் பதில் தரும் வகையில் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறையினரால் நடத்தப்பட்ட வன்முறைக்கு நிகரான சம்பவம் இந்தியாவில் இதுவரை நடக்கவில்லை என்பதுதான் மக்களின் ஏகோபித்த கருத்து. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து வருவதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
முன்னாள் முதல்வரான என்னை வீடுபுகுந்து காவல் துறையினர் தாக்கி கைது செய்தனர். அதுபற்றி கேள்வி கேட்ட அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர். பாலு ஆகியோரையும் தாக்கி கைது செய்தனர் என கருணாநிதி கூறியுள்ளார்.
போலீசாரை முரசொலி மாறன் தாக்கியதையும், டி.ஆர். பாலு மிரட்டியதையும் தொலைக்காட்சியில் அவர் பார்க்கவில்லை போலும்.
ஆட்சியைக் கலையுங்கள் என எங்கே செல்ல வேண்டும், யாரிடம் முறையிட வேண்டும் என்றுகூட தெரியவில்லை என கருணாநிதி கூறியுள்ளார். அதெல்லாம் எங்களுக்கு நன்றாகத் தெரியும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுவதுமாக மீறப்பட்டிருக்கிறது என்று கருத்து தெரிவித்து, திமுக அரசைக் கலைக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்வோம் என்று 1.10.2007ல் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தபோது குட்டுப்பட்டது அவருக்கு நினைவுக்கு வரவில்லை போலும்.
கருணாநிதி நினைக்கும் இடத்தில் சென்று முறையிடுவது, திருடன் கையில் சாவியைக் கொடுப்பதற்குச் சமம் என்பதை அறியாதவர்கள் அல்ல நாங்கள்.
திமுக அரசின் காவல் துறையின் வன்முறை சரியானது என உச்ச நீதிமன்றம் எந்த சந்தர்ப்பத்திலும் கருத்து தெரிவிக்கவில்லை. இதில் இருந்து திமுக அரசிற்கு, காவல் துறையை கையில் வைத்திருக்கும் கருணாநிதிக்கு உச்ச நீதிமன்றம் நெற்றியடி கொடுத்திருப்பது தெள்ளத் தெளிவாகிறது.
இதைப் புரிந்து கொள்ளாமல் அறிக்கை விட்டிருப்பது அவரது அறியாமையைத்தான் வெளிப்படுத்துகிறது.
உயர் நீதிமன்றத்துக்குள் காவல் துறையினரை அனுமதித்தது யார் என உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு இன்னும் பதில் இல்லை. அந்த அனுமதியை அளிக்கும் அதிகாரம் கருணாநிதியிடம் தான் உள்ளது. எனவே அவர்தான் அப்படி அறிவுறுத்தியிருக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள்.
வேறு யாராவது அப்படி அறிவுறுத்தியிருந்தால், காவல் துறை கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லை என்றாகிவிடும். எனவே, உச்ச நீதிமன்ற வினாவிற்கு கருணாநிதி தக்க பதிலை அளிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அவ்வாறில்லாமல், முன்பு நடந்த சம்பவங்களை ஒப்பீடு செய்யும் ஆராய்ச்சியில் அவர் ஈடுபடுவது, தவறு செய்தவர்களுக்கு துணை போவது போலவும், தான் செய்த தவறை மறைக்க முயற்சிப்பது போலவும் உள்ளது.
பிப்ரவரி 19ல் உயர் நீதிமன்றத்தில் நடந்த தாக்குதல் ஆங்கிலேய ஆட்சியில் ஜெனரல் டயர் காலத்தில் நடந்த வன்முறையைப் போல உள்ளது.
திருமங்கலம் இடைத்தேர்தல் பற்றி தேர்தல் ஆணையரிடம் முறையிட்டது பற்றி கருணாநிதி கூறியுள்ளார். கடிதத்தின் இணைப்புகளைப் பார்த்தால் அதில் உள்ள உண்மை புலப்படும் என ஜெயலலிதா கூறியுள்ளார்.