25ம் தேதி திமுக வேட்பாளர் 'இன்டர்வியூ'-அழகிரி போட்டி?
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் 25ம் தேதி நடக்கிறது.
தமிழகத்தில் ஒரே கட்டமாக மே 13ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான திமுக நேர்காணல் வரும் 25ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.
முதல்வர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் இந்த நேர்காணல் நடக்கும்.
இது குறித்து அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாடாளுமன்றத் தேர்தலி போட்டியிட விரும்பும் திமுகவினருக்கான விண்ணப்பம் 5ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் கிடைக்கும். தொகுதியில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மார்ச் 15ம் தேதிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் ரூ.10,000. ரிசர்வ் தொகுதிக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.5,000. விண்ணப்பப் படிவங்களை தலைமைக் கழகத்தில் ரூ. 1,000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
தோழமைக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்படுமானால் அந்த தொகுதிகளுக்கு செலுத்திய விண்ணப்ப கட்டணத்தை விண்ணப்பதாரர்களுக்கு வரைவு காசசோலை மூலம் திருப்பி வழங்கப்படும்.
ஒருவர் ஒரு தொகுதிக்கு மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அழகிரி போட்டி:
இதற்கிடையே மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக தென் மண்டலச் பொறுப்பாளர் அழகிரி போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் நச்சரிக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்தத் தொகுதியில் 2004 தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மோகன் வெற்றி பெற்றார். இம் முறை அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்த முறையும் மதுரை தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறது.
அதே நேரத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி மதுரை தொகுதியை கோருவதாகத் தெரிகிறது. மதுரை மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த 3 இடைத் தேர்தல்களிலும் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளதால் வரும் தேர்தலில் திமுகவே போட்டியிட வேண்டும், அதிலும் அழகிரியே போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோரி வருகின்றனர்.
அழகிரியை நிறுத்த வேண்டும் என்று கோரி திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் பல்வேறு இடங்களில் திமுகவினர் மு.க.அழகிரி பெயரை எழுத சுவர்களில் இடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
கருணாநிதியின் பேத்தி திருமணம்:
இதற்கிடயே முதல்வர் கருணாநிதியின் இளைய மகன் மு.க.தமிழரசு- மோகனா தம்பதியின் மகள் பூங்குழலிக்கும், கோவை மத்தி ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பழனிச்சாமியின் மகன் பிரேம் ஆனந்துக்கும் வரும் 8ம் தேதி சென்னை கண்ணகி சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திருமணம் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications