திமுகவிடம் 3 தொகுதிகள் கோருவோம்-திருமா
திருச்சி: நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்ந்தால் சிதம்பரம் உள்ளிட்ட மூன்று தொகுதிகளை கேட்போம் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
உள்ளாட்சித் தேர்தலில் இருந்து தமிழகத்தில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில்தான் விடுதலை சிறுத்தைகள் இருந்து வருகிறது.
காங்கிரஸ் கட்சியும், திமுகவும் இணைந்த கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணிதான். இந்தக் கூட்டணிக்கும் எங்களுக்கும் தொடக்கத்திலிருந்தே எந்த உறவும் கிடையாது. திருமங்கல இடை தேர்தலிலும் காங்கிரசார் இதையே கூறியுள்ளனர்.
எனவே, ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் நாங்கள் இருக்கிறோமா? இல்லையா? என்பதை திமுகதான் தெரிவிக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியுடன் நேரடி உறவுக்கு வாய்ப்பே இல்லை. தொகுதி உடன்பாடு மட்டும் வரலாம். திமுகவுடன் கூட்டணி தொடர்ந்தால் சிதம்பரம் உள்ளிட்ட 3 மக்களவைத் தொகுதிகளைக் கோருவோம்.
நாளை நடை பயணம்:
ஈழத்தில் போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும் என்ற பிரணாபின் கோரிக்கையை இலங்கை அரசு உடனே மறுத்துள்ளது. இதை காரணமாக வைத்து இந்தியா ராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும்.
நீண்ட அழுத்தத்துக்குப் பிறகு பிரணாப் போர் நிறுத்தம் கோரினார் என்ற மகிழ்ச்சி ஏற்பட்டாலும், போர் நிறுத்தம் கேட்பதைப் போல கேட்கிறோம் நீங்கள் மறுத்துவிடுங்கள் என்று முன்கூட்டியே அவர்கள் பேசி வைத்துக் கொண்டு கோரியதாகத் தெரிகிறது.
'நாம் தமிழர்' நடை பயணம் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு நடக்கும் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications