அதிமுக கூட்டணி மேலும் விரிவடையும்-பாண்டியன்
சென்னை: அதிமுக கூட்டணி மேலும் விரிவடைய வாய்ப்பு உள்ளது. சிபிஐ சார்பில் அதிமுகவுடன் இன்று முதல் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுக்கள் தொடங்குகின்றன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகம் (பாலன் இல்லம்) இடிக்கப்பட்டு புதிய முறையில் நவீன கட்டடமாக எழும்பவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம், நடிகர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் பாண்டியன் பேசுகையில்,
நாங்கள் ஏற்கனவே அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளோம். மார்க்சிஸ்டும் இடதுசாரிகள் கூட்டணியில் உள்ளது. ம.தி.மு.க.வும் கூட்டணியில் உள்ளது. கூட்டணி மேலும் விரிவுப்படுத்தலாம். வரும் பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு வெற்றி உறுதி.
தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்காக நானும், எங்களது கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவர் நல்லகண்ணு, மாநில துணை செயலாளர் கோ.பழனிச்சாமி ஆகியோர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் அ.தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தையை தொடங்குகிறோம்.
கேள்வி:- உங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார்?
பதில்:- முதலில் மக்கள் தேர்ந்தெடுக்கட்டும். அதன் பிறகு நாங்கள் கூடிப்பேசி, திட்டம் வகுத்து, அதை யாரிடம் கொடுத்தால் சிறப்பாக செய்வார்கள் என்பதை பார்த்து பிரதமர் வேட்பாளரை அறிவிப்போம் என்றார் பாண்டியன்.












Click it and Unblock the Notifications