தமிழகத்திலிருந்து பிரச்சாரம் தொடங்கும் அத்வானி
சென்னை: தமிழகத்திலிருந்து தனது தேர்தல் பிரசாரத்தை பாஜக தொடங்குகிறது. வருகிற 7ம் தேதி நாகர்கோவிலில் அத்வானி பேசவுள்ளார்.
தமிழகத்தில் எந்தக் கட்சியும் பாஜகவை தனது கூட்டணியில் சேர்ப்பது குறித்து அக்கறை காட்டவில்லை. கடைசிக் கட்டமாகத்தான் அக்கட்சியை சேர்க்கலாம் என்ற யோசனையில் உள்ளன.
காத்திருந்து காத்திருந்து விரக்தியாகி விட்ட பாஜக தமிழகத்தில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் இல.கணேசன் கூறுகையில்,
நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள முன்வந்தால் அவர்களை சேர்க்க தயாராக இருக்கிறோம். தமிழ்நாட்டில் எந்த எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து வருகிற 12-ந் தேதி முடிவு செய்து அறிவிப்போம்.
தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா கட்சி தனித்து போட்டியிட்டு தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறது. தமிழக பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் பட்டியலை 15-ந் தேதி கட்சியின் மேலிடம் அறிவிக்கும்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் தமிழ்நாட்டில் இருந்து தொடங்கப்படுகிறது. வருகிற 7ம் தேதி அத்வானி தமிழ்நாட்டுக்கு வருகிறார். அப்போது அவர் 7ம்ந் தேதி மாலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திடலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
அத்வானி பிரதமராக வேண்டுமென்பதும் மக்கள் விருப்பமாகும். அதை விஜயகாந்த் உள்ளிட்ட தேசப்பக்த உள்ளங்களும், கட்சிகளும் உணர்ந்து புரிந்து கொண்டு எங்கள் அணியில் இணைய வேண்டும். விஜயகாந்திற்கு தனியாகவும் அழைப்பு விடுத்திருக்கிறோம் என்றார் கணேசன்.