கட்சிகளைத் தேடும் 'லெட்டர் பேடுகள்'!
மதுரை:
-கே.என்.வடிவேல்
வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சீட் வேண்டாம். பணம் கொடுத்தால் உங்கள் கூட்டணி கட்சிக்காக தமிழகம் முழுதும் சென்று பிரச்சாரம் செய்ய தயாராக இருக்கிறோம் என கேட்டு பல லெட்டர்பேடு கட்சிகள், பெரிய கட்சிகளிடம் தேர்தல் வியாபாரத்தை ஆரம்பித்துள்ளன.
தேர்தல் வந்துவிட்டால் போதும் இந்த லெட்டர் பேடு கட்சிகள் தொல்லை தாங்க முடியாது. எங்கள் கட்சியில் 50 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள், எனது சமூகத்தினர் வாக்கு 50 கோடி இருக்கிறது என்று வாய்க்கு வந்த நம்பரைச் சொல்லிக் கொண்டு டாடா சுமோக்களை வாடகைக்குப் பிடித்துக் கொண்டு பெரிய கட்சிகளிடம் சென்று பேரம் பேச ஆரம்பிப்பர்.
இதில் சிலருக்கு உண்மையிலேயே சில இடங்களில் செல்வாக்கு இருக்கலாம். அதற்காக இவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நிலையி்ல் பெரிய கட்சிகள் உள்ளன.
இந்த உதவிக்காக பெரிய கட்சிகளிடம் இவர்கள் எதிர்பார்ப்பது வேறொன்றுமில்லை... பணம் தான்.
இப்போது மக்களவைத் தேர்தல் வந்துவிட்டதால் வெறும் 10 உறுப்பினர்களை கொண்ட சில லெட்டர்பேடு கட்சிகளும், ஜாதி சங்கங்களும் பெரிய கட்சிகளுக்கு வலைவீச துவங்கியுள்ளன.
பணம், சாப்பாட்டுச் செலவு, தண்ணி செலவு ஆகியவற்றைக் கவனித்துக் கொண்டால் போதும்.. எந்தக் கட்சி இதைத் தருகிறதோ அந்தக் கட்சியின் கொடியை கையில் பிடித்துக் கொண்டு பிரச்சாரம் செய்ய இவர்கள் ரெடி.
இந்தக் கட்சிகளின் தலைவர்கள் சென்னையில் முகாமிட்டு 'ஆர்டர்' பிடிக்க முயன்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications