நாகர்கோவில்-நாளை அத்வானி பிரச்சாரம் துவக்கம்
நாகர்கோவில்: பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் அத்வானி, நாளை மாலை நாகர்கோவிலில் நடக்கும் கூட்டத்தில் தனது நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து கட்சிகள் கூட்டணி முயற்சியில் மும்முரமாக இறங்கி வருகின்றன. ஆனால் தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்க எந்த கட்சியும் விருப்பமில்லாமல் இருக்கிறது.
இதையடுத்து பாஜக தனித்து போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கன்னியாகுமரி தொகுதியின் பாஜக வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இந் நிலையில் நாளை மாலை 3 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திடல் மைதானத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பாஜக பிரதம வேட்பாளர் அத்வானி கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
பாஜக தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், மாநில தலைவர் இல.கணேசன், துணைத்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
நாகர்கோவிலில் அத்வானிக்கு மூன்றடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார் பயன்படுத்தப்படுவார்கள். விழா பகுதிக்குள் நுழைய இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.